சென்னை: மெட்ரோ ரயிலில் இதுவரை இல்லாத வகையில் ஆகஸ்ட் மாதத்தில் 85.89 லட்சம் பேர் பயணம் செய்ததாக சென்னை மெட்ரோ ரயில் நிர்வாகம் தகவல் தெரிவித்துள்ளது.
இதுகுறித்து அந்நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையில், “சென்னை மெட்ரோ ரயில் நிறுவனம், சென்னையில் உள்ள மக்களுக்கும் வெளி ஊரில் இருந்து வரும் பயணிகளுக்கும் நம்பகத்தன்மையான மற்றும் பாதுகாப்பான போக்குவரத்து வசதியை அளித்து வருகிறது.
“அந்தவகையில் 2023 ஜூலை மாதத்தைவிட ஆகஸ்ட் மாதத்தில் 3,36,215 பயணிகள் கூடுதலாக பயணித்துள்ளனர்.
“மெட்ரோ ரயில் சேவை தொடங்கியதில் இருந்து கடந்த ஆகஸ்ட் மாத பயணிகளின் எண்ணிக்கையே அதிகமாகும்.
ஜனவரியில் 66,07,458, பிப்ரவரியில் 63,69,282, மார்ச் மாதத்தில் 69,99,341, ஏப்ரல் மாதத்தில் 66,85,432, மே மாதத்தில் 72,68,007 பயணிகளும் ஜூன் மாதத்தில் 74,06,876 பயணிகளும் ஜூலையில் 82,53,692 பேரும் ஆகஸ்டில் அதிகபட்சமாக 85,89,977 பேரும் பயணம் செய்துள்ளனர்,” என்று மெட்ரோ நிர்வாகம் கூறியுள்ளது.