சேலம்: நீலகிரி மாவட்டம் கோத்தகிரியை அடுத்த கோடநாடு எஸ்டேட்டில் முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா மற்றும் சசிகலாவுக்குச் சொந்தமான பங்களா உள்ளது.
இந்த பங்களாவில் கடந்த 2017ஆம் ஆண்டு, கொலை, கொள்ளைச் சம்பவங்கள் அரங்கேறின.
இந்த சம்பவங்கள் தொடர்பில் விசாரணை வளையத்தில் இருந்த சேலம் ஆத்தூரைச் சேர்ந்த கனகராஜ் சாலை விபத்தில் இறந்துவிட்டார். இதையடுத்து காவல்துறையினர் கேரளாவைச் சேர்ந்த 10 பேரை கைது செய்தனர்.
ஊட்டி அமர்வு நீதிமன்றத்தில் நடைபெற்ற இந்த வழக்கு சிபிசிஐடி விசாரணைக்கு மாற்றப்பட்டது.
அதனைத் தொடர்ந்து, ஏடிஎஸ்பி முருகவேல் விசாரணை அதிகாரியாக நியமிக்கப்பட்டு 49 பேர் அடங்கிய குழு விசாரணையில் இறங்கியது.
வழக்கு தொடர்பாகவும் கனகராஜ் மரணம் தொடர்பாகவும் இந்தக் குழுவினர் பல்வேறு தரப்பினரிடமும் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
அதன் ஒரு பகுதியாக, முருகவேல் தலைமையிலான குழுவினர் சேலம் மாவட்டத்திற்கு விரைந்து சென்று விசாரணையைத் தொடங்கி உள்ளனர்.
வழக்கில் தொடர்புடைய ஜெயலலிதா கார் ஓட்டுநர் கனகராஜ் மரணம் தொடர்பான விசாரணையை சேலத்தில் முகாமிட்டு அதிகாரிகள் நடத்தி வருகின்றனர்.
இந்தச் சம்பவத்தில் அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமிக்குத் தொடர்பு இருப்பதாகவும் தமது சகோதரர் கனகராஜ் விபத்தில் உயிரிழக்கவில்லை; கொலை செய்யப்பட்டார் என்றும் அண்மையில் கனகராஜின் சகோதரர் தனபால் குற்றம் சாட்டியிருந்தார்.
அப்படிப்பட்ட நிலையில் சேலத்தில் அதிகாரிகள் முகாமிட்டுள்ளது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

