மயிலாடுதுறையில் அமைந்துள்ள மாயூரநாதர் ஆலயக் குடமுழுக்கு விழா ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. கிட்டத்தட்ட 1500 ஆண்டுகள் பழமை வாய்ந்த இந்த ஆலயம் திருவாவடுதுறை ஆதீனத்துக்கு சொந்தமானதாகும்
கங்கை, யமுனை, சிந்து, காவிரி உள்ளிட்ட 9 நதிகளில் இருந்து கொண்டுவரப்பட்ட புனிதநீர் அடங்கிய குடங்களை சிவாச்சாரியார்கள் தலையில் சுமந்து கொண்டு கோயில் விமானத்தை அடைந்தனர்.
காலை 7.30 மணியளவில் விமானங்களுக்கும் ராஜகோபுர கலசத்திற்கும் புனிதநீர் ஊற்றி குடமுழுக்கு விழா நடைபெற்றது.
நால்வரால் பாடல் பெற்ற இந்த ஆலயம் திருவாவடுதுறை ஆதீனத்துக்குச் சொந்தமானதாகும். அம்பாள் மயில் உருவில் இறைவனை பூசை செய்த இந்த ஆலயம் காசிக்கு நிகரான ஆறு ஆலயங்களில் ஒன்றாகும். பல்வேறு சிறப்புக்குரிய இக்கோயிலில் கடைசியாக கடந்த 2005ம் ஆண்டு குடமுழுக்கு நடைபெற்றது.
சீரமைப்பு, புதுப்பிப்புப் பணிகள் 2022ம் தொடங்கப்பட்டது. ஆலயம் முழுவதும் பழமை மாறாமல் வர்ணங்கள் தீட்டப்பட்டன. விளக்குகள் மாற்றப்பட்டன.
ஏறக்குறைய 60 ஆயிரம் சதுர அடி பரப்பளவில் மிக பிரமாண்டமான இந்த ஆலயத்தின் குடமுழுக்கை முன்னிட்டு, 123 குண்டங்களுடன் யாகசாலை அமைக்கப்பட்டது. ராஜகோபுரம், சுவாமி, அம்பாள் கருவறைக் கோபுரங்கள், பரிவார தேவதைகள், கோபுரங்கள் உள்ளிட்ட 84 கோபுரங்கள் ஆலயத்தில் அமைந்துள்ளன.
84 கோபுரக் கலசங்களும் மயிலாடுதுறை காவேரி நகர் பாலத்தில் இருந்து ஊர்வலமாக மாயூரநாதர் ஆலயத்தை வந்தடைந்தன. அலங்கரிக்கப்பட்ட யானை முன்னே செல்ல பண்டைய முறைப்படி பறை, தாரை, தப்பட்டை, மல்லாரி மேளங்கள் முழங்க ஊர்வலம் பிரமாண்டமான முறையில் நடைபெற்றது.
இந்த விழாவில், தமிழகத்தின் பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்
தொடர்புடைய செய்திகள்
கொற்கை வீரட்டேஸ்வரர்
மயிலாடுதுறை தாலுகா கொற்கை கிராமத்தில் தருமபுரம் ஆதீனத்துக்குச் சொந்தமான அட்ட வீரட்ட தலங்களில் ஒன்றான கொற்கை வீரட்டேஸ்வரர் கோயில் குடமுழுக்கு விழாவும் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
சிவபெருமான் மீது மன்மதன் மலர்க் கணைகளை தொடுத்தபோது அவனை சுவாமி நெற்றிக் கண்களால் எரித்து மீண்டும் உயிர்ப்பித்த தலம். இந்தக் கோயிலின் குடமுழுக்கு 64 ஆண்டுகளுக்குப் பிறகு ஞாயிற்றுக்கிழமை காலை நடைபெற்றது
காவிரிக்கரையில் அமைந்துள்ள பாடல்பெற்ற 274 சிவாலயங்களில் ஸ்ரீஞானாம்பிகை உடனாகிய கொற்கை வீரட்டேஸ்வரர் , 26வது தலமாகும். சிவபெருமான் காமனை நெற்றிக்கண்ணால் எரித்த தலம். தீர்க்கவாகு முனிவர் இறைவனை அபிஷேகம் செய்ய கங்கை நீரை விரும்பித் தமது கைகளை நீட்ட, கைகள் நீளாது குறுகியமையால் இவ்வூர் குறுக்கை என வழங்கப்பட்டு, நாளடைவில் மருகி கொற்கை என அழைக்கப்படுகிறது.
இதற்கான யாகசாலை பூஜைகள் கடந்த 31ம் தேதி துவங்கி நடைபெற்று வந்தன. காலை 9:40 மணிக்குச் சிவாச்சாரியார்கள் வேத மந்திரம் ஓத புனித நீர் ஊற்றி குடமுழுக்கு நடைபெற்றது. பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் விழாவில் பங்கேற்றனர். 200க்கும் மேற்பட்ட காவல்துறையினர் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்தனர்.
இதற்கிடையே, வேதாரண்யத்தில் திங்கட்கிழை நடைபெறவிருந்த கோயில் குடமுழுக்கு யாகசாலை பூசைகள் நடைபெற்ற நிலையில் அரசு தரப்பில் ஞாயிற்றுக்கிழமை (செப்டம்பர் 3) தடை செய்யப்பட்டு காவல்துறையினர் குவிக்கப்பட்டுள்ளனர். கட்சியினருக்கிடையே ஏற்பட்ட தகராறு காரணமாக, மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் குடமுழுக்குச் செய்ய தடை விதிக்கப்பட்டுள்ளதாகக் கூறப்பட்டுள்ளது. இதனிடையே, அனுமதி மறுப்பு உத்தரவு வரப்போவதை ஏற்கெனவே அறிந்துகொண்ட பக்தர்கள் சிலர் முதல்கால பூஜை நடைபெற்ற நிலையில், கோயிலின் குடமுழுக்கையும் ரகசியமாக நடத்திவிட்டாதகக் கூறப்படுகிறது.

