சென்னை: ‘ஒரே நாடு, ஒரே தேர்தல்’ என்பது நடைமுறை சாத்தியமில்லாத ஒன்று என்று மக்கள் நீதி மய்யம் தெரிவித்துள்ளது.
மத்தியில் உள்ள பாஜக அரசு மாற்றப்பட வேண்டும் என்றும் அதற்கு காங்கிரஸ் கட்சிதான் மாற்று என்ற உறுதியான நிலைப்பாட்டைக் கொண்டிருப்பதாகவும் அக்கட்சியின் செய்தித் தொடர்பாளர் முரளி அப்பாஸ் கூறினார்.
சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், இண்டியா கூட்டணியில் மக்கள் நீதி மய்யம் இணைவது தொடர்பாக ஓரிரு நாள்களில் முடிவு செய்யப்படும் என்றார்
“எங்கள் தலைவர், ராகுல் காந்தியுடன் இணக்கமாக உள்ளார். வெளிநாட்டில் உள்ள கமல்ஹாசன் செப்டம்பர் 5ஆம் தேதிக்குள் தமிழகம் திரும்பத் திட்டமிட்டுள்ளார்.
“வரும் மக்களவைத் தேர்தலில் கூட்டணியா அல்லது தனித்துப் போட்டியா என்பது குறித்து அவர் தமிழகம் வந்த பின்னர்தான் முடிவு செய்யப்படும்.
“எதிர்க்கட்சிகள் ஒன்றிணைய முதல்வர் மு.க.ஸ்டாலின் அழைப்பு விடுத்ததில் உள்ள நியாயத்தைப் புரிந்து கொண்டுள்ளோம். எனினும் அந்தக் கூட்டணியில் செப்டம்பருக்குள் தொகுதிப் பங்கீடு முடியுமா என்பதை இப்போது கூற முடியாது. அதற்கு நிறைய கட்டங்கள் உள்ளன. கமல்ஹாசனின் அறிவிப்புக்காக நாங்கள் காத்திருக்கிறோம்,” என்றார் முரளி அப்பாஸ்.
பாஜகவை எதிர்த்து களம் காணவே மக்கள் நீதி மய்யம் விரும்புவதாகக் குறிப்பிட்ட அவர், கமல்ஹாசன் தனியார் தொலைக்காட்சித் தொடரில் பங்கேற்பதால், கட்சிப் பணிகள் எந்த வகையிலும் பாதிக்கப்படாது என்றார்.