கோவை: எதிர்வரும் நாடாளுமன்றத் தேர் தலில் தமிழகத்திலும் புதுவையிலும் உள்ள நாற்பது தொகுதிகளிலும் நாம் தமிழர் கட்சி தனித்துப் போட்டியிடும் என அக்கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்துள்ளார்.
மேலும், பொள்ளாச்சியில் நடைபெற்ற கட்சிக்கூட்டத்தில் பங்கேற்ற அவர், பொள்ளாச்சி நாடாளுமன்றத் தொகுதியில் போட்டியிடும் வேட்பாளரையும் அறிவித்தார்.
இதையடுத்து கோவையில் செய்தியாளர்களிடம் பேசிய சீமான், ஒரே நாடு, ஒரே தேர்தல் என்பது அவசியமற்றது என்றார். ஒரே நாடு என்றால் ஏன் காவிரி, முல்லை பெரியாரில் இருந்து தமிழகத்துக்கு தண்ணீர் தர மறுக்கின்றனர் என்று கேள்வி எழுப்பினார்.
இஸ்லாமிய சிறைவாசிகளை விடுதலை செய்தால் காங்கிரஸ் அல்லாத தொகுதிகளில் நாம் தமிழர் கட்சி திமுகவுக்கு ஆதரவு அளிக்கும் என்றும், 2024ஆம் தேர்தலில் வென்று மீண்டும் பிரதமராக மோடி வந்தால் இந்தியாவே இருக்காது என்றும் அவர் கூறினார்.
நாட்டை விற்பதில் காங்கிரசுக்கும் பாஜகவுக்கும் போட்டி நிலவுவதாகக் குறிப்பிட்ட அவர், இதில் மோடி நன்றாக வியாபாரம் செய்கிறார் என்றார்.
“தமிழகத்தில் பல குற்றச் செயல்களுக்கு மூலக்காரணமாக இருப்பது மதுப்பழக்கம். எனவே மதுக்கடைகளை மூட வேண்டும். அனைவருக்கும் அனைத்தும் கிடைக்க சாதிவாரி கணக்கெடுப்பு தேவை.
“கள்ளுக்கு தமிழகத்தில் அனுமதி அளித்தால் சாராய ஆலைகள் முடங்கிவிடும். அதனால்தான் கள்ளுக்கு அனுமதி அளிக்க மறுக்கிறார்கள்,” என்றார் சீமான்.