சென்னை: தமிழகத்தில் இரு புதிய கொரோனா திரிபுகள் கண்டறியப்பட்டுள்ளதாக பொது சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.
கடந்த ஆண்டு செப்டம்பர் முதல் 2023 ஜனவரி வரை 2,085 பேரின் சளி மாதிரிகள் மரபணு பகுப்பாய்வுக்கு உட்படுத்தப்பட்டதாகவும் அவற்றுள் இதில் 420 மாதிரிகளில் ‘எக்ஸ்பிபி’ வகை தொற்றுப் பாதிப்பு கண்டறியப்பட்டதாகவும் சுகாதாரத்துறை அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
மேலும், 98 மாதிரிகள் விரிவான நுண் ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டதில், உலகில் இதுவரை எங்கும் கண்டறியப்படாத, இரண்டு புதிய கொரோனா உருமாற்றங்களை மருத்துவர்கள் கண்டறிந்துள்ளதாக பொது சுகாதாரத்துறை இணை இயக்குநர் மருத்துவர் சிவதாஸ் ராஜூ தெரிவித்துள்ளார்.
“தமிழகத்தில் கடந்த ஆண்டு இறுதியிலும் நடப்பாண்டு தொடக்கத்திலும் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களில் 81 விழுக்காட்டினர் தடுப்பூசிகளை முறையாக செலுத்திக் கொண்டவர்கள். இவர்களில் தீவிர கொரோனா பாதிப்புக்குள்ளானவர்களின் சளி மாதிரிகள் மரபணு பகுப்பாய்வுக்கு உட்படுத்தப்பட்டன.
“இதில் உலகில் எங்கும் கண்டறியப்படாத கிருமித்தொற்றுகள் குறித்து தெரியவந்துள்ளது. எனவே, கோவிஷீல்ட், கோவேக்சின் தடுப்பூசிகளால் எக்ஸ்பிபி உருமாற்றத்தை தடுக்க முடியாது என்பதை உறுதி செய்துள்ளோம்,” என்று மருத்துவர் சிவதாஸ் ராஜு கூறியுள்ளார்.
புதிய உருமாற்றங்கள் கண்டறியப்பட்டாலும், தற்போது கொரோனா தொற்று முழுமையாக கட்டுப்பாட்டுக்குள் வந்துவிட்டதால் அதுகுறித்த அச்சம் தேவையில்லை என்றும் அவர் தெளிவுபடுத்தி உள்ளார்.