நீலகிரி: படுகர் சமூகத்தைச் சேர்ந்த இளம்பெண் ஜெய்ஸ்ரீ விமானியாகி சாதனை படைத்துள்ளார். படுகர் இனத்தைச் சேர்ந்த முதல் பெண் விமானி என்ற பெருமை அவருக்குக் கிடைத்துள்ளது.
நீலகிரி மாவட்டத்தின் மண்ணின் மைந்தர்களாக படுகர் இன மக்கள் கருதப்படுகிறார்கள். இவர்களில் பலர் ஊட்டி, குன்னூர், கோத்தகிரி, கூடலூர் போன்ற பகுதிகளில் வாழ்கின்றனர்.
ஜெய்ஸ்ரீயின் குடும்பம் கோத்தகிரி அருகில் உள்ள நெடுகுளா குருக்கத்தி பகுதியில் வசித்து வருகிறது. இவரது தந்தை மணி, கிராம நிர்வாக அலுவலராகப் பணியாற்றி ஓய்வு பெற்றவர். இவருடைய மனைவி மீரா.
இவர்களுடைய ஒரே மகள் ஜெயஸ்ரீ கோத்தகிரியில் பள்ளிப் படிப்பை முடித்த பின்னர் கோவையில் உள்ள தனியார் கல்லூரியில் பொறியியல் பட்டப்படிப்பை மேற்கொண்டார்.
சில காலம் தகவல் தொழில்நுட்பத் துறையில் பணியாற்றி வந்த ஜெய்ஸ்ரீக்கு விமானி ஆகவேண்டும் என்ற கனவு இருந்தது. இதையடுத்து, விமானியாவதற்கான பயிற்சியில் இணைந்தவர், முதலில் உள்நாட்டில் பயிற்சி பெற்ற அவர், பின்னர் தென்னாப்பிரிக்காவுக்குச் சென்று பயிற்சியைத் தொடர்ந்தார்.
விமானியாகப் பணியாற்றுவதில் நிறைய சவால்கள் உள்ளதாகக் குறிப்பிடுபவர், உடல்நிலை சீராக இல்லையென்றால் பணியை இழக்க நேரிடும் என்கிறார்.
“மூன்று அல்லது ஆறு மாதங்களுக்கு ஒருமுறை உடல் பரிசோதனை, மனநலப் பரிசோதனைகள் நடைபெறும். அவற்றில் தேர்வு பெறவில்லை என்றால் பணியாற்ற இயலாது.
“மேலும் துணிச்சலுடன் செயல்பட வேண்டும். பள்ளிப் படிப்பும், எனக்கு வாய்த்த ஆசிரியர்களும் பெற்றோரும்தான் நான் விமானியாகக் காரணம். நீலகிரி மாவட்டத்தில் முதல் பெண் விமானியாக உருவாகி இருப்பது எனக்கு மகிழ்ச்சி அளிக்கிறது,” என்கிறார் ஜெய்ஸ்ரீ.