நெல்லை: நெல்லை மாவட்டத்தில் அமைந்துள்ள கூடங்குளம் அணுமின் நிலையத்தின் 5, 6வது அணு உலைகளுக்காக, நீராவி உற்பத்தி செய்யும் இயந்திரம் ரஷ்யாவில் இருந்து கொண்டு வரப்பட்டது.
சுமார் 300 டன் எடை கொண்ட இந்த இயந்திரம் செப்டம்பர் 7ஆம் தேதி தூத்துக்குடி வந்தடைந்தது. மறுநாள், தூத்துக்குடி துறைமுகத்திலிருந்து இழுவைக் கப்பல் மூலம் கூடங்குளம் கொண்டு வரப்பட்டது.
அப்போது இழுவைக் கப்பலுக்கும் மிதவைக்கும் இடையிலான கயிறு அறுந்ததால், இயந்திரத்தை ஏற்றிச்சென்ற மிதவை அங்குள்ள பாறை இடுக்குகளில் சிக்கியது.
அதைச் சரிசெய்யும் பணிகள் தற்பொழுது நடைபெற்று வருகின்றன. மிதவை ஒரு பக்கமாக சாய்ந்த நிலையில் இருப்பதாகக் கூறப்பட்டது.
அணுமின் நிலையத்தின் சிறிய துறைமுகப் பகுதியில் இருந்து ஏறக்குறைய ஒரு கிலோமீட்டர் தொலைவிற்குள் பாறை இடுக்குகளில் சிக்கியுள்ள அந்த மிதவை, கடலின் நீர்மட்டம் மற்றும் காற்றின் வேகத்தைப் பொறுத்து அத்துறைமுகத்திற்குக் கொண்டுவரப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

