சென்னை: போலி ஆவணங்களை தயாரித்து தமக்குச் சொந்தமான நிலத்தை அன்பழகன் என்பவர் அபகரித்துவிட்டதாக திரைப்பட நடிகை கௌதமி காவல்துறையில் புகார் அளித்துள்ளார்.
மோசடி குறித்து கேள்வி எழுப்பிய தமக்கு கொலை மிரட்டல் விடுக்கப்பட்டதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் உள்பட பல மொழிகளில் தாம் 125க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் நடித்துள்ளதாகவும் கடந்த 2004ஆம் ஆண்டு தனது மகளுக்கு நான்கு வயதாக இருக்கும்போது தாம் புற்றுநோயால் பாதிக்கப்பட்டதாகவும் கௌதமி குறிப்பிட்டுள்ளார்.
திரைத்துறையில் தாம் சம்பாதித்த பணத்தின் மூலம் ஸ்ரீபெரும்புதூர் பகுதியில் 46 ஏக்கர் நிலம் வாங்கியதாகக் கூறியுள்ள அவர், தற்போது இந்த இடத்தின் மதிப்பு ரூ.25 கோடி எனக் குறிப்பிட்டுள்ளார்.
“எனது மகளின் பராமரிப்புச செலவு, எனது மருத்துவ சிகிச்சைக்காக இந்த இடத்தை விற்பனை செய்ய முடிவு செய்தபோது, கட்டுமான நிறுவன அதிபர் அழகப்பன் என்பவர் அந்த நிலத்தை விற்றுத்தருவதற்கு உதவுவதாகக் கூறினார். அவரை நம்பி, நிலத்தை விற்பனை செய்து தருவதற்கான அதிகாரத்தை வழங்கினேன்.
“அந்தச் சமயத்தில் என்னிடம் பல்வேறு பத்திரங்களில் கையெழுத்து பெற்றுக்கொண்டார். இந்த பத்திரங்களை தவறான வழியில் பயன்படுத்தமாட்டேன் என்று உத்தரவாதம் அளித்தார்.
“ஆனால் எனது இடத்தை அபகரித்து மோசடி செய்துவிட்டனர். இதுபற்றி கேட்டால் கொலை மிரட்டல் விடுக்கின்றனர். எனவே, எனக்கு சொந்தமான இடத்தை மீட்டு தந்து, அபகரித்த அழகப்பன், அவரது மனைவி, அவரது குடும்பத்தினர் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்,” என கௌதமி கோரியுள்ளார்.