சென்னை: பல்வேறு வகையிலான பயங்கரவாத தாக்குதல்களை முறியடிக்கும் விதத்தில் ஓர் ஒத்திகை பயிற்சியை (GANDIV-V) சென்னையில் நடத்த தேசிய பாதுகாப்புப் படை திட்டமிட்டுள்ளது.
அந்த ஒத்திகைப் பயிற்சி வரும் 15ஆம் தேதிமுதல் 17ஆம்தேதி வரை 3 நாட்களுக்கு நடக்கும்.
அதையொட்டி, சென்னை காவல்துறை ஆணையர் அலுவலகத்தில் கலந்தாய்வுக் கூட்டம் செவ்வாய்க்கிழமை நடந்தது.
தேசிய பாதுகாப்புப் படை, உள்துறை, பொதுத்துறை, மாநகராட்சி, கடலோர பாதுகாப்புக் குழு, ரிசர்வ் வங்கி, ரயில்வே, விமான நிலையம், பெருநகரப் போக்குவரத்துக் காவல்துறை, பொதுக் காவல்துறை உள்பட 28 துறைகளைச் சேர்ந்தவர்கள் அதில் பங்கேற்றனர்.
வேப்பேரியில் உள்ள காவல் ஆணையர் அலுவலகத்தில், காவல்துறைக்குப் புதிதாக வழங்கப்பட்ட `வீரா’ என்ற நவீன மீட்பு வாகனத்தில் உள்ள கருவிகள் விபத்து நேரத்தில் எவ்வாறு செயல்படும் என்பதை காவல்துறையினர் அப்போது செய்து காட்டினர்.