சென்னை: ஆவின் நிறுவனம் வெண்ணெய், நெய், தயிர், பால்கோவா உள்பட 225 வகையான பால் பொருட்களைத் தமிழகம் முழுவதும் உள்ள 27 ஒன்றியங்கள் வாயிலாக, தயாரித்து ஆவின் பாலகங்கள், சில்லறை விற்பனையாளர்கள் மூலம் விற்பனை செய்கிறது.
இந்த நிலையில் இந்த ஆண்டு ஆயுத பூஜை, தீபாவளி பண்டிகை காலத்தில் சிறப்பு இனிப்பு வகைகள், கார வகைகளை விற்பனை செய்ய திட்டமிட்டுள்ளது என்று ஆவின் நிறுவன அதிகாரிகள் தெரிவித்தனர்.
“கடந்த ஆண்டு பண்டிகை காலங்களில் ‘நட்ஸ்’ அல்வா, காஜு பிஸ்தா ரோல், நெய் அல்வா, கருப்பட்டி அல்வா, மிக்சர் உள்ளிட்டவற்றை தயாரித்து தமிழகம் முழுவதும் 10,000க்கும் மேற்பட்ட விற்பனை நிலையங்கள், பொதுமக்கள் கூடும் சந்தைகள், சாலை சந்திப்புகள், பேருந்து நிலையங்கள் போன்ற இடங்களில் விற்பனை செய்யப்பட்டன.” என்று அதிகாரிகள் கூறினர்.
“அதன் மூலமாக ரூ.116 கோடிக்கு விற்பனை நடைபெற்றது. கடந்த ஆண்டு விற்பனை 40 விழுக்காடு அதிகரித்தது. இதே போல இந்த ஆண்டும் இனிப்பு, கார வகைகள் விற்பனை செய்ய திட்டமிடப்பட்டு உள்ளது” என்று ஆவின் தெரிவித்தது.
பண்டிகை நெருங்கும் நிலையில் இனிப்பு, கார வகைகளை மொத்தமாக கொள்முதல் செய்ய சென்னையில் உள்ள தகவல் தொழில்நுட்ப நிறுவனங்கள் உள்பட பல தனியார் நிறுவனங்கள் தங்களை அணுகி வருவதாகவும் அது கூறியது.
தரத்தில் அதிக கவனம் செலுத்தவும் ஆலோசனை வழங்கி உள்ளதாக ஆவின் குறிப்பிட்டது.