சென்னை: தமிழக அரசு, வடசென்னையில் ரூ 1,000 கோடி மதிப்பில் பல புதிய திட்டங்களைச் செயல்படுத்த உள்ளது. இதன் மூலம் வடசென்னை மக்களின் வாழ்வில் புதிய கலாசார மேம்பாட்டினை ஏற்படுத்தும் முயற்சிகளில் இறங்கி உள்ளது.
வடசென்னையை மையமாகக் கொண்டு புதிய பள்ளிகள், கல்லூரிகள், சமூக நலக்கூடம் என நவீன வசதிகளை ஏற்படுத்தித் தர, சிஎம்டிஏ நிர்வாகம் மூலம் திட்ட ஆய்வுப் பணிகள் மேற்கொள்ளப்பட்டன.
இப்பணிக்காக 15 அரசு துறைகளை ஒருங்கிணைக்க வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித் துறை நடவடிக்கை எடுத்து வருகிறது. வடசென்னை வளர்ச்சித் திட்டத்தில் மேற்கொள்ள வேண்டிய புதிய பணிகள் குறித்து பொதுமக்களிடம் கருத்துக் கேட்கப்பட்டது. இதில் திரட்டப்பட்ட தகவல்கள் அடிப்படையில், பல்வேறு துறைகளின் ஆலோசனைகளைக் கேட்க முடிவு செய்துள்ளதாக வீட்டுவசதி, நகர்ப்புற வளர்ச்சித் துறை உயரதிகாரி ஒருவர் கூறியுள்ளார்.
இதன்படி, இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறை, தொழிலாளர் மற்றும் திறன் மேம்பாட்டுத் துறை, வீட்டுவசதி வாரியம், நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியம் உள்ளிட்ட 15 துறைகளை, இதில் ஈடுபடுத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. இதற்கான ஆலோசனைக் கூட்டம் விரைவில் நடத்தப்பட உள்ளது.
இக்கூட்டத்தில் எடுக்கப்படும் முடிவுகள் அடிப்படையில், வடசென்னை வளர்ச்சித் திட்டம் உருவாக்கப்படும் என்று அவர் கூறினார். சென்னை மாநகராட்சி, நீர்வளத் துறை, நெடுஞ்சாலைத் துறை வாயிலாக, வடசென்னை பகுதியில் பல்வேறு கட்டமைப்புத் திட்டங்கள் மேற்கொள்ளப்படுகின்றன.
திரு.வி.க நகர் உள்ளிட்ட மொத்தம் 6 பகுதிகளில் உள்ள பேருந்து நிலையங்களை மேம்படுத்தவும், அதிகம் போக்குவரத்து நெரிசல் மிகுந்த இடங்களைக் கண்டறிந்து மேம்பாலங்களைக் கட்டவும், இளைஞர்கள் பயன்பெறும் விதம் விளையாட்டு மைதானங்களை உருவாக்கவும் கழிவுநீர் வெளியேறச் சரியான பாதைகளை உருவாக்குவது, நல்ல குடிநீர் வசதிகளை அமைப்பது உள்ளிட்ட திட்டங்கள் உள்ளன.
மேலும் காசிமேடு முதல் திருவொற்றியூர் வரை உள்ள கடற்கரையைச் சுற்றுலாத் தலமாக மாற்றவும் புதிய மீன் சந்தையை அமைக்கவும் திட்டமிடப்பட்டுள்ளது.

