சென்னை: முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் விடுதலையானவர்களை சொந்த நாட்டுக்கு திருப்பி அனுப்ப இந்திய அரசு நடவடிக்கை மேற்கொள்ள இருப்பதாக ஊடகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
ராஜீவ் காந்தி கொலை வழக்கில் ஆயுள்தண்டனை விதிக்கப்பட்டு சிறையில் இருந்த நளினி, முருகன் உள்ளிட்டோரை விடுதலை செய்து உச்சநீதிமன்றம் கடந்தாண்டு தீர்ப்பளித்தது.
இதில் இலங்கை நாட்டவர்களான முருகன், ராபர்ட் பயஸ், ஜெயக்குமார், சாந்தன் ஆகிய நான்கு பேரும் திருச்சியில் உள்ள அகதிகள் முகாமில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.
இந்நிலையில் லண்டனில் வசிக்கும் தங்களது மகளுடன் சேர்ந்து வாழ விரும்புவதால் தனது கணவர் முருகனை திருச்சி அகதிகள் முகாமில் இருந்து விடுவிக்கக்கோரி உயர் நீதிமன்றத்தில் நளினி வழக்கு தொடர்ந்திருந்தார்.
இந்த வழக்கை கடந்த முறை விசாரித்த நீதிபதி, இதுதொடர்பாக மத்திய, மாநில அரசுகள் பதிலளிக்க உத்தரவிட்டிருந்தார்.
இந்நிலையில், இந்த வழக்கில் வெளிநாட்டினருக்கான பதிவு அலுவலக மண்டல அதிகாரி உயர் நீதிமன்றத்தில் பதில் மனு ஒன்றை தாக்கல் செய்தார்.
அந்த மனுவில், ‘‘முன்னாள் இலங்கை நாட்டவர்களான முருகன் உள்ளிட்ட 4 பேரும் கள்ளத்தோணி மூலமாகவே இந்தியாவுக்குள் நுழைந்துள்ளனர்.
“எனவேதான் அவர்கள் அகதிகள் முகாமில் தங்கவைக்கப்பட்டுள்ளனர். அவர்களுக்கான பயண ஆவணங்களை வழங்கக்கோரி இந்தியாவில் உள்ள இலங்கை துணைத் தூதரகத்துக்கு கடந்த டிசம்பர் மாதம் கடிதம் அனுப்பப்பட்டுள்ளது. உரிய ஆவணங்கள் கிடைத்ததும் இவர்கள் நான்கு பேரையும் இலங்கைக்கு திருப்பி அனுப்ப நடவடிக்கை எடுக்கப்படும்,’’ என தெரிவிக்கப்பட்டுள்ளது.