சென்னை: தமிழ்நாட்டில் பல இடங்களிலும் தேசியப் புலனாய்வு முகவை அமைப்பு திடீர் சோதனைகளை நடத்தியது.
சென்னையில் மூன்று இடங்களிலும் தென்காசியில் ஓரிடத்திலும் கோவையில் 20க்கும் மேற்பட்ட இடங்களிலும் அதிகாரிகள் சனிக்கிழமை அதிகாலை முதலே சோதனைகளைத் தொடங்கியதாக ஊடகத் தகவல்கள் தெரிவித்தன.
பயங்கரவாதிகளுக்குப் பயிற்சி அளிக்கப்படுவதாகக் கிடைத்த தகவலை அடுத்து சோதனைகள் நடத்தப்பட்டதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது.
கோவையில் முன்பு நிகழ்ந்த கார் வெடிகுண்டு வெடிப்புச் சம்பவத்தில் ஒருவர் உயிரிழந்தார். அவர் பல பயங்கரவாதச் செயல்களையொட்டி தேடப்படும் குற்றவாளி என்று நம்பப்படுகிறது.
அந்த நபர் படித்து வந்த கல்லூரியில் தீவிரவாத, பயங்கரவாதச் செயல்களுக்கான பயிற்சி அளிக்கப்படுவதாக அதிகாரிகளுக்குத் தகவல் கிடைத்தது.
அதையடுத்து அந்தக் கல்லூரியில் படித்தவர்கள், இதர தொடர்புடையவர்கள் ஆகியோருக்குச் சொந்தமான 30 வீடுகளில் சோதனை நடப்பதாக ஊடகங்கள் தெரிவித்தன. தெலுங்கானாவிலும் சோதனைகள் நடத்தப்பட்டன.

