வேலாயுதம்பாளையம்: தமிழர்களின் வாழ்க்கையோடு இரண்டறக் கலந்த பனை மரச் சாகுபடியில் தொழிலதிபர் ஒருவர் பலரின் பாராட்டைப் பெறும் வகையில் சாதனை படைக்கிறார்.
மனித வாழ்வுக்குத் தேவையானவற்றில் பலவற்றையும் தந்து உதவும் பனைமரங்களின் எண்ணிக்கை தமிழ்நாட்டில் குறைந்து வருவதாக இயற்கை ஆர்வலர்கள் கவலை தெரிவிக்கிறார்கள்.
இந்த நிலையில், ‘கற்பகத் தரு’ என்று குறிப்பிடப்படும் பனைமரத்தைப் பெருக்குவதற்காக தனியார் தொண்டு நிறுவனங்களும் அரசாங்கமும் விவசாயிகளிடம் விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகின்றன.
அதன் பலனாக ஒரு சிலர் பனைமர விவசாயத்தில் நாட்டம் காட்டி வருகிறார்கள்.
இந்நிலையில், கரூர் மாவட்டம் தோட்டக்குறிச்சி அய்யம்பாளையத்தைச் சேர்ந்த அன்புநாதன் என்பவர் தன்னுடைய 10 ஏக்கர் தரிசு நிலத்தில் 4,000 பனைவிதைகளை நடவுச் செய்துள்ளார்.
தென்னை மரத்தைவிட பனைமரம் லாபம் தரக்கூடியது என்று அவர் கூறினார்.
பனைமரத்தைப் பயிர் செய்வதன் மூலம் நுங்கு, கருப்பட்டி முதலான பலவற்றையும் விற்று காசு பார்க்கலாம் என்றார் அவர்.
பனை மரம் மானாவாரி பயிர் என்பதால் வறட்சி, வெள்ளம் எதையும் தாங்கி வளரும். பராமரிப்புச் செலவு மிகவும் குறைவு என்று தெரிவிக்கும் அந்த விவசாயியைப் பொதுமக்களும் பாராட்டுகிறார்கள்.
‘தென்னையை வைத்தவர் தின்றுவிட்டு போவார்; பனையை வைத்தவர் பார்த்துவிட்டுப் போவார்’ என்று ஒரு வழக்குச் சொல் இருக்கிறது.
தென்னை மரத்தைப் பயிர் செய்பவர்களின் ஆயுளுக்குள் அவை காய்க்கத் தொடங்கிவிடும்.
ஆனால், பனை மரம் வளர்ந்து காய்களை தருவதற்கு நெடுங்காலம் பிடிக்கும். ஒருவரின் ஆயுளே முடிந்துவிடும். இது பற்றி பனை விவசாயத்தில் தீவிரம் காட்டும் தொழிலதிபரான அன்புநாதனிடம் கேட்டபோது வருகின்ற தலைமுறைகள் அனுபவிக்க வேண்டும் என்பதற்காகவே தான் இதில் தீவிரம் காட்டுவதாகக் குறிப்பிட்டார்.