திருவாரூர்: திருவாரூரில் செவ்வாய்க்கிழமையன்று மத்திய அரசைக் கண்டித்து விவசாயிகள் ரயில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். பி.ஆர்.பாண்டியன் தலைமையில் நடந்த இந்தப் போராட்டத்தில் 50 விவசாயிகள் கைதுசெய்யப்பட்டனர்.
காவிரி மேலாண்மை ஆணையம் உத்தரவின்படி கர்நாடக அரசு காவிரியில் உரிய தண்ணீரைத் திறக்க மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். மேகதாதுவில் அணை கட்டுவதற்கு கர்நாடக அரசுக்கு அனுமதி வழங்கக்கூடாது.
தமிழ்நாட்டில் உள்ள ராசிமணலில் அணை கட்டுவதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும். காவிரி மேலாண்மை ஆணையத்தின் அதிகாரத்தை மத்திய அரசு முடக்கக்கூடாது போன்ற கோரிக்கைகளை வலியுறுத்தி அவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
அதன்படி திருவாரூர் ரயில் நிலையத்தில் மன்னார்குடி, மயிலாடுதுறை பயணிகள் ரயிலை மறித்து போராட்டம் நடத்தப்பட்டது. ரயிலை மறித்து போராட்டக் குழுவினர், கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தி முழக்கங்களை எழுப்பினர்.
காவல் துறை உயர் அதிகாரிகள் போராட்டக்குழுவினருடன் பேச்சுவார்த்தை நடத்தியதை அடுத்து போராட்டம் முடிவுக்கு வந்ததாகக் கூறப்படுகிறது.

