சென்னை: நெல்லை - சென்னை வந்தே பாரத் அதிவிரைவு ரயில் சேவை வரும் 24ஆம் தேதி தொடங்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
நாடு முழுவதும் 50க்கும் மேற்பட்ட வந்தே பாரத் ரயில்கள் இயக்கப்பட்டு வரும் நிலையில், தமிழகத்தில் சென்னை - மைசூரு, சென்னை - கோவை வழியில் இரண்டு வந்தே பாரத் ரயில்கள் இயக்கப்பட்டு வருகின்றன.
இந்நிலையில், மூன்றாவதாக சென்னை எழும்பூர் - திருநெல்வேலி வழித்தடத்தில் வந்தே பாரத் ரயில வருகின்ற ஞாயிற்றுக்கிழமை தொடங்கவுள்ளது.
நெல்லையில் இருந்து சென்னைக்கு மொத்தம் 652 கி.மீ. தொலைவை வெறும் 7.50 மணிநேரத்தில் பயணிக்கு இந்த ரயில் செவ்வாய்க்கிழமை தவிர வாரத்தில் 6 நாள்கள் இயக்கப்படவுள்ளன.
நாள்தோறும் காலை 6 மணிக்கு திருநெல்வேலியில் இருந்து புறப்படும் இந்த ரயில், விருதுநகர், மதுரை, திண்டுக்கல், திருச்சி, விழுப்புரம் ஆகிய நிலையங்களில் நின்று பிற்பகல் 1.50 மணிக்கு சென்னையின் எழும்பூர் நிலையம் வந்தடையும். அதேபோல், சென்னை எழும்பூரில் இருந்து பிற்பகல் 2.50 மணிக்கு புறப்பட்டு திருநெல்வேலிக்கு இரவு 10.40 மணிக்கு சென்றடையும் வகையில் அட்டவணை தயாரிக்கப்பட்டுள்ளது.

