புதுடெல்லி: மக்களவையில் பாரதிய ஜனதா கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்கள் இந்தி மொழியில் கூச்சலிட்டனர். அப்போது, “இந்தியில் பேசினால் எனக்குப் புரியாது,” என்று திமுக நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி கூறினார்.
மத்திய சட்டத் துறை அமைச்சர் அர்ஜூன்ராம் மெஹ்வால் செவ்வாய்க்கிழமை மக்களவையில் மகளிர் இடஒதுக்கீடு மசோதாவை தாக்கல் செய்தார். தொடர்ந்து புதன்கிழமை மசோதா மீது விவாதம் நடைபெற்றது.
மகளிர் இடஒதுக்கீடு மசோதா குறித்து திமுக நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி பேசத் தொடங்கினார். அப்போது பாஜக உறுப்பினர்கள் கூச்சலிட்டனர்.
அப்போது கனிமொழி, ‘இப்படி நீங்கள் இந்தியில் கூச்சலிட்டால் எனக்குப் புரியாது, இந்தியில் பேசினால் எனக்குப் புரியாது.” என்றார்.
உடனே அருகில் இருந்த தேசியவாத காங்கிரஸ் கட்சி நாடாளுமன்ற உறுப்பினர் சுப்ரியா சுலே உள்ளிட்ட எதிர்க்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்களும் கனிமொழிக்கு ஆதரவாக அவைத்தலைவரிடம் ‘அவர் இன்னும் பேசவே தொடங்கவில்லை. இதுதான் பாஜகவினர் பெண்களுக்கு கொடுக்கும் மரியாதையா?’ என்று கேள்வி எழுப்பினர்.
முன்னதாக, மகளிர் இட ஒதுக்கீட்டை உடனே செயல்படுத்தும் வகையில், மசோதாவில் மக்கள் தொகை கணக்கெடுப்பு, தொகுதி மறுவரையறை ஆகியவற்றில் திருத்தம் கொண்டு வரக் கோரி மக்களவையில் திமுக எம்.பி கனிமொழி கேட்டுக்கொண்டார்.

