திருப்பூர்: மத்திய பாஜக அரசை எதிர்ப்பது போன்று மக்களிடம் காட்டிக்கொண்டு பாஜக தலைவர்களை அதிமுகவினர் ரகசியமாக சந்தித்துப் பேசி வருவதாக முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
திருப்பூரில் நடைபெற்ற திமுகவின் மேற்கு மண்டல வாக்குச்சாவடி பொறுப்பாளர்கள் பயிற்சி பாசறைக் கூட்டத்தில் கலந்துகொண்டு பேசிய அவர், பாஜக தலைமையானது அதிமுகவை பயமுறுத்தி, அச்சுறுத்தி தன்னுடைய கூட்டணியில் வைத்திருப்பதாகக் குறிப்பிட்டார்.
“இரு கட்சிகளும் சண்டை போடுவதாக வெளியில் நடிக்கின்றன. ஆனால் உள்ளே நட்பாக இருக்கின்றன. எதற்காக இந்த நடிப்பு?
“அதிமுகவை ஆதரித்தால், அவர்களின் ஊழல்களுக்கு பாஜகவும் பொறுப்பேற்க வேண்டி வரும். பாஜகவை ஆதரித்தால் அதன் மதவாதத்திற்கு அதிமுகவும் துணைபோக வேண்டிவரும். அதனால் நடிக்கின்றன,” என்றார் முதல்வர் ஸ்டாலின்.
அண்மையில் உள்துறை அமைச்சர் அமித்ஷாவை பார்க்க எடப்பாடி பழனிசாமி டெல்லி சென்றது எதற்காக என்று கேள்வி எழுப்பிய அவர், கோடநாடு வழக்கில் இருந்து விடுவித்துக்கொள்ள உதவி கேட்டுச் சென்றாரா என்றும் கேட்டுள்ளார்.

