சென்னை: குப்பைத் தொட்டியில் இருந்து கண்டெடுக்கப்பட்ட நடராஜர் சிலையால் சென்னை, சூளைமேடு பகுதியில் பரபரப்பு நிலவியது. சிலையைக் கைப்பற்றிய காவல்துறையினர் இதுகுறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
திங்கட்கிழமையன்று சூளைமேட்டில் இயங்கி் வரும் தனியார் தொழில்நுட்பக் கல்லூரி அருகே உள்ள குப்பை தொட்டியில் இருந்த குப்பைகளை மாநகராட்சி தூய்மைப் பணியாளர்கள் அள்ளிச் சென்றனர். அப்போது குப்பைத் தொட்டியில் பெரிய பை ஒன்றைக் கண்ட தூய்மைப் பணியாளர்கள் பரமேஸ்வரியும் கௌரியும் அதை திறந்து பார்த்தனர்.
அப்போது, அந்தப் பைக்குள் மூன்றடி உயரமுள்ள பித்தளையால் செய்யப்பட்ட அழகான நடராஜர் சிலை ஒன்று காணப்பட்டது.
அதிர்ச்சி அடைந்த இருவரும் அந்தச் சிலையை உடனடியாக அருகிலுள்ள காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர்.
ஏதாவது கோவிலில் இருந்து இந்தச் சிலை திருடப்பட்டிருக்கலாம் என காவல்துறையினர் கருதுகின்றனர். திட்டமிட்டபடி கையோடு கொண்டு செல்ல முடியாமல், மர்ம நபர்கள் இச்சிலையை குப்பை தொட்டியில் வீசியிருக்கலாம் என்றும் கருதப்படுகிறது.
இதையடுத்து, தமிழக சிலை கடத்தல் தடுப்பு பிரிவினரிடம் இந்த நடராஜர் சிலை ஒப்படைக்கப்பட உள்ளது. அதன் பின்னர் சிலை குறித்து அந்தப் பிரிவினர் விசாரணை நடத்த உள்ளனர்.
சிலை கண்டெடுக்கப்பட்ட பகுதியில் உள்ள கண்காணிப்புக் கருவிகளை காவல்துறை ஆய்வு செய்து வருகிறது.

