வேலாயுதபாளையம்: அரசியல்வாதியான ஒரு மாதை அவருடைய நகைகளுக்காக ஆசைப்பட்டு கொலை செய்த தேநீர் கடை தம்பதியை காவல்துறையினர் சிறையில் அடைத்து துருவிதுருவி விசாரித்து வருகிறார்கள்.
இதன்தொடர்பில் காவல்துறையினர் பல விவரங்களைத் தெரிவித்தனர்.
ஈரோடு மாவட்டத்தில் உள்ள சோழ காளிபாளையத்தைச் சேர்ந்த ஆட்டுக் கறிக்கடை உரிமையாளரான தங்கராசு, 57, என்பவரின் மனைவி ரூபா, 42, அரசியலில் ஈடுபட்டு படிப்படியாக உயர்ந்து சென்ன சமுத்திரம் பேரூராட்சியில் திமுக கவுன்சிலராக பணியாற்றியவர்.
அவர், கரூரில் செயல்படும் ஜவுளி நிறுவன உரிமையாளர் வீட்டில் வேலை பார்த்து வந்தார்.
ரூபா திங்கட்கிழமை தன் வீட்டில் இருந்து புறப்பட்டு கரூருக்கு வேலைக்குச் சென்றவர் வீடு திரும்பவில்லை.
காவல்துறையிடம் புகார் தெரிவிக்கப்பட்டதை அடுத்து அதிகாரிகள் பல கோணங்களிலும் விசாரணை நடத்தினர்.
இந்த நிலையில், கரூர் மாவட்டத்தில் உள்ள பாலமலை முருகன் கோயில் என்ற ஒரு கோயிலின் அருகே இருக்கும் காட்டுப் பகுதியில் தலை நசுங்கிய நிலையில் ரூபாவின் உடல் கண்டு பிடிக்கப்பட்டது.
ரூபா கொலை செய்யப்பட்டு இருக்கிறார் என்பதைக் கண்டுகொண்ட அதிகாரிகள் அந்த மாதுடன் கரூர் ஜவுளி நிறுவனத்தில் வேலை பார்த்த நித்யா, 28, என்பவரை விசாரித்தனர்.
முன்னுக்குப் பின் முரணாகப் பதிலளித்த நித்யா கடைசியில் வசமாகச் சிக்கினார். நித்யாவும் அவருடைய கணவரான கதிர்வேல், 33, என்பவரும் கரூர் சாலையில் தேநீர் கடை நடத்தி வருகிறார்கள்.
ரூபா அதிகமாக நகைகளை அணிந்துகொண்டு எங்கும் சென்று வருவார். அந்த நகைகளை எப்படியாவது பறித்துவிட வேண்டும் என்று முடிவு செய்த நித்யா, தன்னுடைய கணவருடன் சேர்ந்து சதியில் ஈடுபட்டார். ஒரு நாள் தந்திரமாக ரூபாவை முருகன் கோயிலுக்கு அழைத்துச் சென்றார்.
பிறகு பக்கத்தில் இருக்கும் காட்டிற்கு வரும்படி ரூபாவை நித்யா அழைத்தார். அங்கு ஏற்கெனவே பதுங்கியிருந்த நித்யாவின் கணவரும் நித்யாவும் சேர்ந்துகொண்டு ரூபாவின் கழுத்தை நெரித்து கல்லை வைத்து நசுக்கிக் கொலை செய்தனர்.
நகைகளை எல்லாம் பறித்துக்கொண்டு ஓடிவிட்டனர் என்று நித்யா வாக்குமூலத்தில் தெரிவித்து இருப்பதாக அதிகாரிகள் குறிப்பிட்டனர்.