சென்னை: தமிழகத்தில் காய்ச்சலால் பாதிக்கப்படுவோர் எண்ணிக்கை அதிகரித்து வருவதாக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.
அரசு மருத்துவமனை மட்டுமின்றி, தனியார் மருத்துவமனைகளிலும் காய்ச்சலுக்கு சிகிச்சை பெற வருவோர் எண்ணிக்கை கணிசமாக உயர்ந்துள்ளதாக அத்துறையின் அதிகாரிகள் தெரிவித்தனர்.
குறிப்பாக, புறநோயாளிகளின் எண்ணிக்கை 20 முதல் 30 விழுக்காடு வரை உயர்ந்துள்ளது. சென்னை எழும்பூர் அரசு மகப்பேறு மருத்துவமனையில் தினசரி அனுமதிக்கப்படும் 70 குழந்தைகளில் இருபது பேருக்காவது காய்ச்சல் பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்படுகிறது.
சென்னை, செங்கல்பட்டு, ஈரோடு, தென்காசி, காஞ்சிபுரம், திருச்சி உள்ளிட்ட மாவட்டங்களில் காய்ச்சல் பாதிப்பு அதிகரித்துள்ளது என்றும் நடப்பாண்டில் இதுவரை 4,454 பேர் டெங்கி காய்ச்சலால் பாதிக்கப்பட்டு, 3 பேர் உயிரிழந்துள்ளனர் என்றும் சுகாதாரத்துறை வட்டாராத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இதற்கிடையே அக்டோபர் 1ஆம் தேதி 1,000 இடங்களில் மருத்துவ முகாம்களை நடத்த சுகாதாரத் துறை நடவடிக்கை எடுத்துள்ளது.

