சென்னை: தமிழக அமைச்சர் மீதான சொத்துக்குவிப்பு வழக்கு உள்ளிட்ட பல்வேறு முக்கிய வழக்குகளை விசாரித்து வந்த சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் திடீரென உயர் நீதிமன்ற மதுரை கிளைக்கு மாற்றப்பட்டுள்ளார்.
எனினும் இந்த இடமாற்றம் மூன்று மாதங்கள் மட்டுமே அமலில் இருக்கும் என்றும் அதன் பின்னர் அவர் மீண்டும் சென்னை உயர் நீதிமன்றத்துக்கு திரும்புவார் என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
தமிழக அமைச்சர்கள் பொன்முடி, தங்கம் தென்னரசு, சாத்தூர் ராமச்சந்திரன் ஆகியோர் மீதான சொத்துக் குவிப்பு வழக்குகளின் மேல்முறையீட்டு மனுவை தாமாக முன்வந்து விசாரித்து வருகிறார் நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ்.
சென்னை உயர் நீதிமன்ற நீதிபதிகள் மூன்று மாதங்களுக்கு ஒருமுறை உயர் நீதிமன்ற மதுரை கிளைக்குப் பணியிட மாற்றம் செய்யப்படுவது வழக்கம்.
இந்த நடைமுறையின் கீழ், நீதிபதி ஆனந்த் வெங்கடேஷும் மதுரை கிளைக்கு மாற்றப்பட்டுள்ளார். அக்டோபர் 3, 2023 முதல் டிசம்பர் 22, 2023 வரையிலான மூன்று மாத காலத்துக்கு அவர் உயர் நீதிமன்ற மதுரை கிளையில் வழக்குகளை விசாரிப்பார்.
இதையடுத்து சென்னை உயர் நீதிமன்றத்தில் அவர் விசாரித்து வந்த வழக்குகளை நீதிபதி ஜெயச்சந்திரன் கவனிப்பார் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது

