சிவகங்கை: கீழடியில் நடைபெற்று வந்த ஒன்பதாம் கட்ட அகழாய்வுப் பணிகள் சனிக்கிழமையுடன் (நேற்று) நிறைவடைந்தன.
இதையடுத்து அடுத்தக்கட்ட அகழாய்வு நடவடிக்கைகள் அடுத்த ஆண்டு ஜனவரி மாதம் தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
சிவகங்கை மாவட்டம், கீழடியில் எட்டு கட்டங்களாக மேற்கொள்ளப்பட்ட அகழாய்வுப் பணிகளின்போது ஏராளமான அரிய பொருள்கள் கிடைத்துள்ளன.
இதையடுத்து ஒன்பதாம் கட்ட அகழாய்வு நடைபெற்று வந்தது. இம்முறை கோள வடிவிலான எடை கல், பாம்பு உருவ சுடுமண் பொம்மை உள்ளிட்ட 600க்கும் மேற்பட்ட தொல்பொருள்கள் கண்டெடுக்கப்பட்டன.
கொந்தகை பகுதியில் இரண்டு குழிகள் தோண்டப்பட்டு 25 முதுமக்கள் தாழிகள் கண்டறியப்பட்டன. அவற்றுள் 14 தாழிகள் திறக்கப்பட்டபோது, அவற்றுள் எலும்புக்கூடுகள், மண்டை ஓடுகள், சுடுமண் கிண்ணம் ஆகியவை கிடைத்துள்ளன.
அவற்றை மரபணு பரிசோதனைக்கு உட்படுத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. இதையடுத்து ஒன்பதாம் கட்ட அகழாய்வுப் பணிகள் நிறைவடைந்ததாக அதிகாரிகள் தெரிவித்தனர்.