போதைப் பொருள் கடத்திய வெளிநாட்டவருக்கு பத்தாண்டு சிறை

போதைப் பொருள் கடத்திய வெளிநாட்டவருக்கு பத்தாண்டு சிறை

1 mins read
c7d01d80-fa4a-4a81-9483-e68c500a5b0a
குற்றஞ்சாட்டப்பட்டவர் 2018ஆம் ஆண்டு, மே 5ஆம் தேதி கைதானார். - படம்: ஊடகம்

சென்னை: விமானம் மூலம் போதை மருந்து கடத்தி வந்த போர்ச்சுகல் நாட்டைச் சேர்ந்த ஆடவருக்கு சென்னை சிறப்பு நீதிமன்றம் பத்து ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்து தீர்ப்பளித்தது.

கடந்த 2018ஆம் ஆண்டு, மே 5ஆம் தேதி பிரேசில் நாட்டின் சாவ் பாலோவில் இருந்து, சென்னைக்கு விமானம் மூலம் போதைப் பொருள் கடத்தி வரப்படுவதாக போதைப்பொருள் கடத்தல் தடுப்பு நுண்ணறிவுப் பிரிவு அதிகாரிகளுக்கு ரகசியத் தகவல் கிடைத்தது.

இதையடுத்து சென்னை விமான நிலையத்தில் கண்காணிப்பு தீவிரமடைந்தது. அன்றைய தினம் சென்னை வந்திறங்கிய விமானப் பயணிகள் அனைவரும் தீவிர சுங்கச் சோதனைக்கு உட்படுத்தப்பட்டனர்.

அப்போது போர்ச்சுகல் நாட்டைச் சேர்ந்த டொமிங்கோஸ் மென்டிஸ் என்ற பயணி மீது அதிகாரிகளுக்கு சந்தேகம் எழுந்தது. இதையடுத்து அவரது உடமைகளை சோதனையிட்டனர்.

அப்போது உணவுப் பொருள்களுடன் அவர் மறைத்து வைத்திருந்த, 1.8 கிலோ எடையுள்ள கோகைன் போதைப் பொருள் சிக்கியது.

இதையடுத்து டொமிங்கோஸ் கைதானார். அவர் மீதான கடத்தல் வழக்கு, சென்னையில் உள்ள சிறப்பு நீதிமன்றத்தில் நடைபெற்றது.

விசாரணையின் முடிவில் டொமிங்கோஸ் மீதான குற்றச்சாட்டுகள் சந்தேகத்துக்கு இடமின்றி நிரூபிக்கப்பட்டு இருப்பதாகக் குறிப்பிட்ட நீதிபதி, அவருக்குப் பத்து ஆண்டுகள் சிறை தண்டனையும், 2 லட்சம் ரூபாய் அபராதமும் விதித்து தீர்ப்பளித்தார்.

குறிப்புச் சொற்கள்

தொடர்புடைய செய்திகள்