சென்னை: விபத்து ஏற்படுத்திய வழக்கில் யூடியூபர் டி.டி.எப். வாசனுக்கு அக்டோபர் 16ஆம் தேதி வரை 14 நாட்களுக்கு நீதிமன்றம் காவலை நீட்டித்து காஞ்சிபுரம் நீதித்துறை நடுவர் நீதிமன்ற நீதிபதி இனிய கருணாகரன் உத்தரவு பிறப்பித்தார்.
இதனைத்தொடர்ந்து காஞ்சிபுரம் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட பிணை மனு டி.டி.எப். வாசன் தரப்பில் மீட்டுக்கொள்ளப்பட்டது.
இதையடுத்து வழக்கு தொடர்பாக சென்னை உயர் நீதிமன்றத்தில் பிணை கோரி யூடியூபர் டிடிஎப் வாசன் மனுத்தாக்கல் செய்தார்.
இந்த வழக்கை நீதிபதி கார்த்திகேயன் வியாழக்கிழமை விசாரித்தார். அப்போது டிடிஎப் வாசன் 20 லட்சம் ரூபாய் மதிப்புள்ள பைக் வைத்துள்ளார். விபத்தின்போது ரூ. 3 லட்சம் மதிப்புள்ள பாதுகாப்பு ஆடை அணிந்ததால் அவர் உயிர் தப்பினார். யூடியூப் சேனலில் டிடிஎப் வாசனை 45 லட்சம் சிறார்கள் பின்தொடர்ந்து தவறான வழிக்குச் செல்கின்றனர் என காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
இதனை கேட்ட நீதிபதி, விளம்பரத்திற்காக இதுபோன்ற செயலில் ஈடுபடும் டிடிஎப் வாசனின் யூடியூப் சேனலை முடக்க வேண்டும். அத்துடன் அவரது மோட்டார் சைக்கிளை எரித்து விடலாம் என காட்டமாக கூறி டிடிஎப் வாசனின் பிணை மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டார்.