மும்பை: விஷால் நடித்துள்ள மார்க் ஆண்டனி திரைப்படம் கடந்த மாதம் 15ஆம் தேதி வெளிவந்தது. 28ஆம் தேதி இந்தியில் வெளியிடப்பட்டது.
இதற்கான சான்றிதழைப் பெற தணிக்கைக் குழுவுக்கு ரூ.6.5 லட்சம் லஞ்சம் கொடுத்ததாக நடிகர் விஷால் சமூக வலைதளம் வாயிலாக புகார் எழுப்பினார்.
இதுதொடர்பாக உடனடியாக நடவடிக்கை எடுக்கப்பட்டதில் மூன்று இடைத்தரகர்கள், பெயர் குறிப்பிடாத தணிக்கை குழு அதிகாரிகள் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.
திரைப்பட தணிக்கைக் குழு, தனி நபர்களுக்கு எதிராக எழுப்பப்பட்ட புகார் தொடர்பாக மும்பை உட்பட நான்கு இடங்களில் சோதனை நடத்தப்பட்டது. அப்போது முக்கிய ஆவணங்கள் கைப்பற்றப்பட்டன.
இடைத்தரகர்கள் மெரின் மேனகா, தீஜா ராம்தாஸ், ராஜன் ஆகியோர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டு உள்ளது. பெயர் குறிப்பிடாத தணிக்கை குழு அதிகாரிகளும் வழக்கில் சிக்கி உள்ளனர்.
இதுதொடர்பாக தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருகிறது என்று மத்திய புலனாய்வுத் துறை அலுவலக அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

