சென்னை: நடிகர் விஜய் மக்கள் இயக்கத்தின் சார்பில் இலவச சட்ட ஆலோசனை மையங்கள் தொடங்கப்படுகின்றன. இதன் மூலம் விஜய் முழுநேர அரசியலில் ஈடுபடப் போவது உறுதியாகிவிட்டதாக அரசியல் பார்வையாளர்கள் சிலர் கருதுகின்றனர்.
அக்டோபர் 9ஆம் (இன்று) தேதி சென்னையில் முதலாவது இலவச சட்ட ஆலோசனை மையம் தொடங்கப்படும் என அந்த இயக்கம் அறிவித்துள்ளது.
ஏழை, எளிய மக்கள் சட்ட உதவிகள் தொடர்பாக அவதிபடக்கூடாது என்ற அடிப்படையில், இலவச சட்ட ஆலோசனை மையம் தொடங்கப்படுவதாக இயக்கத்தின் பொதுச்செயலாளர் புஸ்சி ஆனந்த் கூறியுள்ளார்.
சென்னை, கொடுங்கையூர் பகுதியில் இம்மையம் இயங்கும் என்றும் அப்பகுதி மக்கள் மாலை வேளைகளில் சட்ட ஆலோசனைகளைப் பெறலாம் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
இதேபோல சென்னையின் இதர பகுதிகளிலும் சட்ட ஆலோசனை மையங்கள் அடுத்தடுத்து திறக்கப்படும் என்று செய்தியாளர்களிடம் பேசுகையில் அவர் குறிப்பிட்டதாக தினத்தந்தி ஊடகச் செய்தி தெரிவிக்கிறது.
விஜய் மக்கள் இயக்கம் சார்பில் அண்மையில் ஏழைக் குழந்தைகளின் கல்விக்கு உதவும்வகையில் இரவுநேர பயிலகங்கள் தொடங்கப்பட்டன. மேலும், குழந்தைகளுக்கு ஊட்டச்சத்து கிடைக்கும் வகையில் பால், முட்டை, ரொட்டி ஆகியவற்றையும் அந்த இயக்கத்தினர் இலவசமாக அளித்து வருகின்றனர்.
இந்நிலையில், இலவச சட்ட ஆலோசனை மையங்களும் தொடங்கப்படுவது, அவர் மிக விரைவில் முழுநேர அரசியலில் ஈடுபடுவதற்கான அறிகுறிகள் என்றும் அரசியல் பார்வையாளர்கள் கருதுகின்றனர்.

