சென்னை: ‘நான் முதல்வன்-தமிழ்நாடு கோடர்ஸ் பிரீமியர் லீக்’ என்ற திட்டம் வாயிலாக தமிழக இளைஞர்களுக்கு இலவசமாக கோடிங் (நிரலாக்கம்) எழுதும் பயிற்சியைத் தொடங்கியுள்ளது ஐஐடி-யின் குவி நிறுவனம்.
இது தொடர்பாக சென்னை ஐஐடி அறிக்கை வெளியிட்டு உள்ளது.
சென்னை ஐஐடி, ஐஐஎம் அகமதாபாத் ஆகியவற்றின் தொழில் ஊக்குவிப்பு நிறுவனமான குவி (GUVI) தமிழ்நாட்டில் ஒரு லட்சம் பொறியியல் மாணவர்களுக்கு தொடர்ச்சியாக ஹேக்கத்தான்கள் மூலம் பயிற்சி அளிக்கும் திட்டத்தை முன்னெடுத்துள்ளது.
‘நான் முதல்வன்- தமிழ்நாடு கோடர்ஸ் பிரீமியர் லீக்’ என்றழைக்கப்படும் இந்த முயற்சிக்காக, தமிழ்நாடு அரசின் நான் முதல்வன் திட்டம், அண்ணா பல்கலைக்கழகம், தமிழ்நாடு திறன் மேம்பாட்டுக் கழகம் ஆகியவற்றோடு இந்நிறுவனம் கூட்டு முயற்சியில் ஈடுபட்டுள்ளது.
திருச்செங்கோட்டில் கேஎஸ்ஆர் கல்வி நிறுவனங்கள், சேலம் அன்னபூர்ணா பொறியியல் கல்லூரி மற்றும் பல கல்லூரிகள் இந்த மாபெரும் ஹேக்கத்தான் தொடரை நடத்தும் தொடர்பு மையங்களாக குவி-யுடன் கூட்டுச் சேர்ந்துள்ளன.
இந்த தொடர் ஹேக்கத்தான் மூலம், தமிழ்நாடு அரசின் பல்வேறு துறைகளின் சிக்கலான அறிக்கைகளுக்கு தீர்வு காணவும், அவற்றைச் சமாளிக்க புதுமையான தொழில்நுட்பத் தீர்வுகளை வழங்கவும் மாணவர்கள் முயற்சிகளை மேற்கொள்வார்கள்.
முன்னோடியான இந்த முன்முயற்சியை தமிழ்நாடு அரசின் இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கடந்த 6ஆம் தேதி சென்னை அண்ணா நூற்றாண்டு நூலகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் தொடங்கி வைத்தார்.

