கடலூர்: காணாமல் போன குளம் ஒன்று கண்டுபிடிக்கப்பட்டது கடலூர் மாவட்டம் அழகுபெருமாள் குப்பம் ஊராட்சி மக்களை உற்சாகத்தில் ஆழ்த்தியுள்ளது.
ஏறக்குறைய அறுபது ஆண்டுகளுக்கு முன்பு அந்தக் குளம் மாயமாகிவிட்டது. பல்வேறு ஆக்கிரமிப்புகளே இதற்குக் காரணம் என ஊர் மக்கள் கூறினர்.
மண்டகுளம் என்று குறிப்பிடப்பட்ட அந்தக் குளம் இருந்த இடமே தெரியாமல் மண் மேடாக மாறிவிட்டது.
இதையடுத்து குளத்தைக் கண்டுபிடிக்கக் கோரி ஊர் மக்கள் ஊராட்சி மன்றத் தலைவி விஜயலட்சுமியிடம் மனு அளித்திருந்தனர். அந்தக் குளம் இருந்த இடத்தைக் கண்டுபிடிக்க மண்மேட்டில் அளவீடு செய்யப்பட்டது.
இதன் மூலம் குளத்தை தூர்வார முடியும் என அதிகாரிகள் தெரிவித்தனர். தற்போது பத்து லட்சம் ரூபாய் செலவில் குளத்தை தூர் வாரும் பணி நடைபெற்று வருகிறது. மிக விரைவில் பணிகள் முழுமையாக முடிவடையும் என்றும் அதன் பிறகு பொதுமக்கள் குளத்தைப் பயன்படுத்த இயலும் என்றும் அதிகாரிகள் மேலும் கூறியுள்ளனர்.


