திருவண்ணாமலை: காரும் லாரியும் நேருக்கு நேர் மோதிக்கொண்ட கோர விபத்தில் எட்டுப் பேர் உயிரிழந்தனர்.
திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் பகுதி அருகே இந்த விபத்து சனிக்கிழமை நிகழ்ந்தது. எட்டுப் பேரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துவிட்டதாக ஏசியா நெட் ஊடகச் செய்தி தெரிவிக்கிறது.
பெங்களூரு நோக்கிச் சென்று கொண்டிருந்த கார் ஒன்று மற்றொரு காரை முந்திச் செல்ல முயன்றபோது திடீரென கட்டுப்பாட்டை இழந்தது. இதையடுத்து எதிர்த்திசையில் வந்துகொண்டிருந்த ஒரு லாரி மீது நேருக்கு நேர் மோதியது.
விபத்துக்குள்ளான காரில் மூன்று சிறார்கள், நான்கு பெண்கள், ஓர் ஆடவர் ஆகியோர் பயணம் செய்தனர்.
லாரி மீது மோதிய வேகத்தில் அந்தக் கார் நொறுங்கிப்போனது. அதில் பயணம் செய்த எட்டுப் பேரும் உடல் நசுங்கி உயிரிழந்ததாக காவல்துறை தெரிவித்தது.
விபத்துக்குப்பின் லாரி ஓட்டுநர் தப்பியோடிவிட்டார். அவர் தேடப்பட்டு வரும் நிலையில், இந்த விபத்து காரணமாக பெங்களூரு நெடுஞ்சாலையில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.