சென்னை: சென்னை மெரினா, பெசன்ட்நகர் மற்றும் பட்டினப்பாக்கம் கடற்கரைகளில் பிளாஸ்டிக் ஒழிப்புப் பேரணி நடைபெற்றது.
உலக சேவை தினத்தையொட்டி, அனைத்துலக அரிமா சங்கம் சார்பில் பொது இடங்களில் தூய்மை பேணுதல் மற்றும் ஒருமுறை பயன்படுத்தும் பிளாஸ்டிக் பொருள்களை ஒழித்தல் தொடர்பான விழிப்புணர்வுப் பேரணி சென்னை பட்டினப்பாக்கம் கடற்கரையில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
மெரினா, பெசன்ட்நகர் மற்றும் பட்டினப்பாக்கம் கடற்கரைகளில் 6,500க்கும் மேற்பட்ட பள்ளி, கல்லூரி மாணவ, மாணவிகள், பொதுமக்கள், அரிமா சங்க உறுப்பினர்கள் உள்ளிட்டோர் கடற்கரையைச் சுத்தப்படுத்தும் பணியில் ஈடுபட்டனர்.
நிகழ்ச்சியின் முடிவில் உலக சாதனை ஒன்றியத்தின் சார்பில் அனைத்துலக அரிமா சங்கத்துக்கு, விழிப்புணர்வுப் பேரணியில் அதிக மக்கள் பங்கேற்றதற்கான சாதனைச் சான்றிதழ் வழங்கப்பட்டது. இதுகுறித்து செய்தியாளர்களிடம் மேயர் பிரியா கூறுகையில், “இது உலகிலேயே பெரிய அளவிலான கடற்கரையைச் சுத்தப்படுத்தும் நிகழ்வாகும். இதன்மூலம் அரிமா சங்கம் உலக சாதனை படைத்துள்ளது. தூய்மைப் பணியில் மாணவர்கள் சிறப்பாக ஈடுபட்டனர்,” என்றார்.

