சென்னை: திமுக அரசு திரைத்துறையை முடக்கவில்லை என்றும் திரையுலகத்தினரை உற்சாகப்படுத்தி, ஊக்கப்படுத்தி வருகிறது என்றும் சட்டத்துறை அமைச்சர் ரகுபதி தெரிவித்துள்ளார்.
சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், திமுக ஆட்சியில் திரைத்துறை செழிப்பாக இருக்கிறது என்றார்.
“திரைத்துறை விவகாரங்களில் தமிழக அரசு தலையிட்டது இல்லை. திரையுலகம் எங்கள் நட்பு உலகம். அது செழிப்பாக இருப்பதற்கு திமுக அரசுதான் காரணம்.
“சிறிய தயாரிப்பாளர்களைக்கூட தமிழக அரசு ஊக்குவிக்கிறது. சினிமாவிற்குத் தடை போட்டு திரையுலகத்தினரிடம் அரசு விரோதப்போக்கை மேற்கொள்ளாது,” என்றார் அமைச்சர் ரகுபதி.
விஜய் நடிப்பில் உருவாகி உள்ள லியோ படத்தின் சிறப்புக் காட்சிக்கு வேண்டும் என்றே தமிழக அரசு தடை விதித்துள்ளதாக வெளியான செய்தியை அவர் திட்டவட்டமாக மறுத்தார்.
நீதிமன்றம் உத்தரவிட்டால் ‘லியோ’ படத்தின் அதிகாலை 4 மணி காட்சிக்கு அனுமதி வழங்கப்படும் என்றார் அவர்.
சிறப்புக் காட்சியைத் திரையிட அனுமதி அளிப்பதில் பாதுகாப்பு உள்ளிட்ட பல்வேறு சிக்கல்கள் இருப்பதாக தமிழக அரசு உயர் நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது.
நடிகர் விஜய்யைப் பார்த்து ஆளும் திமுக அரசு அஞ்சுகிறது என்றும் திரைத்துறையை திமுக அரசு முடக்குவதாகவும் அதிமுக முன்னாள் அமைச்சர் கடம்பூர் ராஜு அண்மையில் குற்றஞ்சாட்டி இருந்தார்.