திருச்சி: வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டதை அடுத்து, திருச்சி விமான நிலையத்தில் பதற்றம் நிலவியது.
மத்திய தொழில் பாதுகாப்புப் படையினர் வெடிகுண்டைக் கண்டறிவதற்கான சோதனையை மேற்கொண்டனர். இதன் காரணமாக விமான நிலையத்தில் இருந்த பயணிகள் மத்தியில் பரபரப்பு ஏற்பட்டது.
வெள்ளிக்கிழமை காலை விமான நிலையத்தின் மேலாளருடைய வாட்ஸ்அப் கணக்கில் வெடிகுண்டு மிரட்டல் வந்தது.
திருச்சி விமான நிலையத்திற்கு வரும் விமானங்களில் அரிவாள் உள்ளிட்ட பயங்கர ஆயுதங்களும் வெடிகுண்டுகளும் கொண்டு வரப்படுவதாக அந்த மிரட்டல் செய்தியில் குறிப்பிடப்பட்டு இருந்தது.
இதையடுத்து, விமான நிலைய பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்த மத்திய தொழில் பாதுகாப்பு படையினரும் வெடிகுண்டு நிபுணர்களும் தீவிர சோதனை மேற்கொண்டனர். எனினும், வெடிகுண்டு ஏதும் சிக்கவில்லை.
இந்நிலையில், மிரட்டல் வந்த வாட்ஸ்அப் கணக்கின் மூலம் விசாரணை மேற்கொண்டபோது சென்னையைச் சேர்ந்த மனநலம் பாதிக்கப்பட்ட சங்கீதா என்பவர்தான் மிரட்டல் விடுத்தார் என்பது தெரிய வந்தது.
இனி இதுபோன்ற செயல்களில் ஈடுபடக்கூடாது என்ற எச்சரிக்கையுடன் அவர் விடுவிக்கப்பட்டதாக தமிழ் ஏசியாநெட் ஊடகம் தெரிவித்துள்ளது.