சென்னை: தமிழகத்தில் வடகிழக்குப் பருவமழை அடுத்த இரு நாள்களில் தொடங்கும் என சென்னை வானிலை மையம் முன்னறிவித்துள்ளது.
இந்நிலையில், அரபிக்கடலில் புயல் சின்னமும் வங்கக் கடலில் புதிய காற்றழுத்த தாழ்வு நிலையும் உருவாகும் என அம்மையம் கணித்துள்ளது.
இது தொடர்பாக அம்மையம் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. புதன்கிழமையன்று தென்கிழக்கு மற்றும் அதனை ஒட்டிய தென்மேற்கு அரபிக்கடல் பகுதிகளில் நிலவிய காற்றழுத்த தாழ்வு பகுதி, தற்போது காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்று அதே பகுதிகளில் நிலவுவதாக அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.
சனிக்கிழமையன்று (இன்று) அது புயல் சின்னமாக உருவெடுக்கக்கூடும் என்றும் அவ்வாறு நிகழும் பட்சத்தில் தெற்கு ஓமன் மற்றும் அதனை ஒட்டிய ஏமன் கடலோரப் பகுதிகளுக்கு நகரக்கூடும் என்றும் வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது. இதே போல கடந்த 19ஆம் தேதி, தென்கிழக்கு வங்கக்கடலில் புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகி உள்ளது.
மேலும் குமரிக்கடல் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளில் ஒரு வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் மிதமான மழை பெய்யக்கூடும்.
இந்நிலையில் கிழக்கு, வடகிழக்கு காற்று தென்னிந்திய பகுதிகளில் வீசும் நிலையில் வடகிழக்கு பருவமழை அடுத்த இரண்டு நாள்களில் தென்னிந்திய பகுதிகளில் துவங்கக்கூடும் என்கிறது சென்னை வானிலை ஆய்வு மையம்.
இதற்கிடையே, வடகிழக்குப் பருவமழையை எதிர்கொள்வது தொடர்பாக தமிழக அரசின் தலைமைச் செயலாளர் அதிகாரிகளுடன் தீவிர ஆலோசனை மேற்கொண்டார்.
அனைத்துவிதமான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளையும் மேற்கொள்ள வேண்டும் என அவர் அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளார் என ஊடகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

