சென்னை: தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தின் (டிஎன்பிஎஸ்சி) புதிய தலைவராக ஓய்வுபெற்ற காவல்துறை அதிகாரி சைலேந்திர பாபுவை நியமிக்க ஆளுநர் ஆர்.என்.ரவி மீண்டும் மறுத்துள்ளார்.
இதையடுத்து தமிழக அரசுக்கும் ஆளுநர் மாளிகைக்கும் இடையேயான மோதல் மேலும் தீவிரமடைந்துள்ளது.
அரசுப் பணியாளர் தேர்வாணையத்தின் தலைவர் பதவி தற்போது காலியாக உள்ளது. இதையடுத்து புதிய தலைவராக தமிழக காவல்துறை முன்னாள் தலைவரான டிஜிபி சைலேந்திர பாபுவை நியமிக்க தமிழக அரசு ஆளுநருக்குப் பரிந்துரை செய்தது.
இந்த நியமனத்துக்கு ஒப்புதல் வழங்கக்கோரி தமிழக அரசு கடந்த ஜூன் மாத இறுதியில் உரிய கோப்பு ஒன்றை அனுப்பி வைத்தது. அதைப் பரிசீலித்த ஆளுநர் ஆர்.என்.ரவி, தேர்வாணைய தலைவர் எந்த அடிப்படையில் தேர்வு செய்யப்படுகிறார், இது தொடர்பாக உச்ச நீதிமன்றத்தின் வழிகாட்டும் நெறிமுறைகள் பின்பற்றப்பட்டனவா, தேர்வாணைய உறுப்பினர்கள் தேர்வில் கடைப்பிடிக்கப்பட்ட நடைமுறைகள் என்ன என்பன உள்ளிட்ட பல்வேறு கேள்விகளை எழுப்பி இருந்தார்.
ஆளுநர் எழுப்பிய கேள்விகளுக்கு தமிழக அரசு உரிய விளக்கங்களை அளித்தது. மேலும், சைலேந்திரபாபுவை தேர்வாணையத் தலைவராக நியமிக்க வேண்டும் என மீண்டும் வலியுறுத்தியது.
இந்நிலையில், சைலேந்திர பாபு நியமனத்தை தமிழக ஆளுநர் மீண்டும் நிராகரித்துள்ளார். மேலும் தலைவர் தேர்வு முறையில் வெளிப்படைத்தன்மை இல்லை என்று அவர் சுட்டிக்காட்டி உள்ளதாகவும் வேறு ஒருவரை தலைவராக நியமிக்க பரிந்துரைத்துள்ளதாகவும் தினத்தந்தி ஊடகச் செய்தி தெரிவிக்கிறது.
தமிழக அரசுக்கும் ஆளுநருக்கும் இடையே பல்வேறு கருத்து வேறுபாடுகள் நிலவி வருகின்றன. இதையடுத்து ஆளும் திமுக தரப்பைச் சேர்ந்தவர்கள் ஆளுநரின் செயல்பாடுகளை கடுமையாக விமர்சித்து வருகின்றனர்.
இந்நிலையில், அரசுப் பணியாளர் தேர்வாணையத்துக்கு புதுத் தலைவரை நியமிப்பது தொடர்பாகவும் அரசுக்கும் ஆளுநருக்கும் இடையே மறைமுக மோதல் வெடித்துள்ளது.