சென்னை: பாஜகவின் அடிப்படை உறுப்பினர் பதவியில் இருந்து விலகுவதாக நடிகை கௌதமி அறிவித்துள்ளார். அவரது இம்முடிவு வருத்தமளிப்பதாக தமிழக பாஜக நிர்வாகிகள் தெரிவித்தனர்.
கட்சித் தலைவர்களிடம் இருந்து தமக்கு எந்தவித ஆதரவும் ஒத்துழைப்பும் இல்லை என்று கௌதமி விளக்கம் அளித்துள்ளார்.
“எனக்கு எந்த ஆதரவும் இல்லை என்பது மட்டுமல்லாமல், அவர்களில் பலர் எனது நிலத்தை அபகரித்து மோசடி செய்த நபருக்கு ஆதரவாக உள்ளனர்,” என்று கௌதமி கூறியுள்ளார்.
தமக்குச் சொந்தமான ரூ.25 கோடி மதிப்புள்ள நிலத்தை அழகப்பன் என்பவர் அபகரித்துவிட்டார் என்பது இவரது குற்றச்சாட்டு. இது தொடர்பாக அவர் காவல்துறையில் புகாரும் அளித்துள்ளார்.
“அழகப்பன் மீது வழக்குப் பதிவான நிலையில், கடந்த நாற்பது நாள்களாக தலைமறைவாக இருக்க அவருக்கு மூத்த பாஜக தலைவர்களே உதவியாக இருப்பதை அறிந்து மனம் நொறுங்கிப் போனேன். என கனத்த இதயத்துடனும் ஆழ்ந்த ஏமாற்றத்துடனும் பாஜகவில் இருந்து விலகும் முடிவை எடுத்துள்ளேன்,” என்று கௌதமி கூறியுள்ளார்.