சென்னை: தமிழ் நாட்டின் விளையாட்டுத் துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் குறித்து அவதூறு கருத்துகளை வெளியிட்டதாக ஆங்கில தொலைக்காட்சி ஊடகத்தின் ஆசிரியர் அபிஜித் மஜும்தார் என்பவர் மீது வழக்குத் தொடரப்பட்டுள்ளது.
அந்த வழக்கு தொடர்பான காவல்துறை விசாரணைக்கு அபிஜித் முன்னிலையாக வேண்டும் என்று சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.
ஆங்கிலத் தொலைக்காட்சி ஒன்றில் ஆலோசனை ஆசிரியராகப் பணிபுரியும் அபிஜித் எழுதியிருந்த ஒரு கட்டுரையில் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் குறித்து அவதூறான கருத்துகளைப் பதிவு செய்ததாக அவர் மீது சென்னை இணையக் குற்றத்தடுப்புக் காவல்துறையினர் வழக்குப் பதிவுசெய்துள்ளனர்.
இந்த வழக்கை ரத்து செய்யக் கோரி அபிஜித் மஜும்தார் தாக்கல் செய்த மனுவை விசாரித்த சென்னை உயர் நீதிமன்றம், நவம்பர் 8ஆம் தேதி, சென்னை இணையக் குற்றத்தடுப்புக் காவல்துறையினர் முன்பு விசாரணைக்கு முன்னிலையாகும்படி அவருக்கு உத்தரவிட்டுள்ளது.

