சென்னை: விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் (விசிக) முதன்மைச் செயலர் உஞ்சைஅரசன் (67) நேற்று காலமானார். அவரது மறைவுக்கு அரசியல் தலைவர்கள் இரங்கல் தெரிவித்துள்ளனர்.
தஞ்சாவூர் மாவட்டம் பட்டுக்கோட்டை அருகே உஞ்சை விடுதியைச் சேர்ந்த அரசுப் பள்ளி ஆசிரியர் துரை ராஜன். முற்போக்குச் சிந்தனை கொண்ட இவர், தொடக்கத்தில் கம்யூனிஸ்ட் இயக்கங்களில் செயல்பட்டு வந்தார். பின்னர், தலித் விடுதலை பண்பாட்டு இயக்கத்தை நிறுவி பட்டியலினத்தவர்களின் உரிமைகளுக்காக போராடினார்.
1990 காலகட்டத்தில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியில் இணைந்தார். கடந்த 2002ஆம் ஆண்டு அனைவரும் தமிழ்ப் பெயரை சூட்டிக் கொள்ள வேண்டும் என கட்சித் தலைவர் திருமாவளவன் அறிவுறுத்தலின்பேரில், தனது பெயரை உஞ்சை அரசன் என மாற்றிக்கொண்டார்.
25 ஆண்டுகளுக்கும் மேலாக கட்சியின் பல்வேறு பொறுப்புகளை வகித்த அவர், இறுதியாக முதன்மைச் செயலாளராக உயர்ந்தார்.
அண்மையில் கட்சிப் பணிக்காக கள்ளக்குறிச்சி சென்றிருந்தபோது, அக்டோபர் 2ஆம் தேதி மாரடைப்பு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். மேல் சிகிச்சைக்காக சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவர், இதயம் செயலிழந்த நிலையில் செவ்வாய்க்கிழமை காலையில் உயிரிழந்தார்.
இதையடுத்து அவரது உடல், பொதுமக்கள் அஞ்சலிக்காக சென்னை, அசோக் நகரில் உள்ள கட்சித் தலைமையகத்தில் வைக்கப்பட்டிருந்தது. அங்கு விசிக தலைவர் திருமாவளவன் கட்சிக் கொடியை போர்த்தி அவருக்கு அஞ்சலி செலுத்தினார். தொடர்ந்து, விசிக நிர்வாகிகளும் பொதுமக்களும் அஞ்சலி செலுத்தினர்.

