சென்னை: தொல்பொருள் ஆய்வுக் கண்காணிப்பாளர் அமர்நாத் இராமகிருஷ்ணாவை இந்திய தொழில்பொருள் ஆய்வுத் துறை டெல்லிக்கு பணியிட மாற்றம் செய்திருக்கிறது.
வழக்கமாக இந்தப் பதவிகளை வகிப்போர் 3 ஆண்டுகளுக்கு ஒரு முறை பணியிட மாற்றம் செய்யப்படுவார்கள். ஆனால், அமர்நாத் ராமகிருஷ்ணா, 2021ஆம் ஆண்டு அக்டோபர் மாதம்தான் சென்னைக்கு பணியிட மாற்றம் செய்யப்பட்டார். இரண்டு ஆண்டுகளுக்குள் மீண்டும் அவர் முன்கூட்டியே பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளார். இது வன்மையான கண்டனத்திற்குரியது என்று திராவிடர் கழகத் தலைவர் கி. வீரமணி தெரிவித்துள்ளார்.
கீழடியில் நடந்த இரண்டு கட்ட அகழ் ஆராய்ச்சிகள் தொடர்பாக கடந்த ஜனவரி மாதம்தான் 982 பக்கங்களைக் கொண்ட அறிக்கையை அரசிடம் சமர்ப்பித்திருந்தார். இந்தநிலையில்தான், தமிழகத்தின் கீழடியில் நடைபெற்று வரும் அகழ் ஆய்வுப் பணிகளை முடக்கும் வகையில், இந்த பணியிட மாற்றம் செய்யப்பட்டிருப்பதாகக் குற்றம்சாட்டப்பட்டுள்ளது.
“வரலாற்றுப் பெருமை வாய்ந்த திராவிட நாகரிகத்தின் தொன்மை குறித்து புதுப்புது தடயங்கள், சான்றுகள் கிடைத்துவரும் வேளையில், அவற்றை ஒழுங்குபடுத்தி அவற்றின் தனிப்பெரும் வரலாற்று ஆய்வுபற்றிய குறிப்புகளை மிகத் தெளிவாகத் தரும் ஆற்றல் வாய்ந்த, அனுபவம் நிறைந்த அதிகாரி அமர்நாத் இராமகிருஷ்ணனை திடீரென்று எந்தக் காரணமும் இல்லாமல் தில்லிக்கு, மத்திய அரசு மாற்றியிருப்பது - தமிழ்நாட்டுப் பழம்பெரும் நாகரிகத் தரவுகள், சான்றாவணங்களை உலகம் பெருமையுடன் நோக்குவதைத் தடுக்கும் சூழ்ச்சி.
“அதில் அதிக ஈடுபாட்டுடன் நேர்மையுடன் கடமையாற்றிய அதிகாரி அமர்நாத் இராமகிருஷ்ணன் அவர்களை இப்படி தமிழ்நாட்டின் புதைபொருள் ஆராய்ச்சியைத் தண்டிப்பதுபோல மாற்றியுள்ளது வன்மையான கண்டனத்திற்குரியது,” என்று அதில் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இதுபற்றி தமிழ்நாடு மத்திய தொல்பொருள் துறை அமைச்சருக்குக் கடிதம் எழுதி, அவரை தமிழ்நாட்டிலேயே தொடரச் செய்தால், தமிழ்நாட்டுப் புதை பொருள் ‘ஆய்வுகள்’ தொய்வின்றித் தொடரும் வாய்ப்பு ஏற்படும் என்று கி.வீரமணி தெரிவித்துள்ளார்.
தமிழ்நாட்டில் நகர்ப்புற நாகரிகத்தின் தடயம் முதன்முதலாக கீழடியில் கண்டறியப்பட்டது. இதை ஆய்ந்தறிந்த அமர்நாத் ராமகிருஷ்ணாவை பாராட்டுவதற்கு பதில் உடனடியாக அவரை தொலைவில் உள்ள அசாம் மாநிலத்துக்கு மத்திய அரசு மாறுதல் செய்தது. இதற்கு தமிழகத்தில் கடும் எதிர்ப்பு எழுந்தவுடன், மூன்றாம் கட்ட ஆய்வு என்ற பெயரில் ஓர் ஆய்வை மத்திய அரசு நடத்தி, புதிதாக எதுவும் கிடைக்கவில்லை என்று கூறி, அதை முடிக்குமாறு ஆணையிட்டது.
தமிழக மக்கள் கொதித்தெழுந்தவுடன், தமிழக தொல்லியல் துறை அமைச்சர், துறையின் செயலாளர் ஆகியோர் நான்காம் மற்றும் ஐந்தாம் கட்ட ஆய்வுகளை தமிழக தொல்லியல் துறையின் சார்பில் நடத்த முன்வந்து ஆணை பிறப்பித்தது.