சென்னை: டாக்டர் எம்ஜிஆர் மருத்துவ பல்கலைக்கழகத்தில் ரூ.100 கோடியில் கலைஞர் நூற்றாண்டு ஆராய்ச்சி நிலையக் கட்டடம் அமைக்கப்பட உள்ளதாக அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்தார்.
நோய்த் தாக்கங்களில் இருந்து மக்களைக் காப்பதற்கு நோய்க் கிருமிகள் பற்றி ஆராய்ச்சிப் பணிகளை மேற்கொள்ளும் வகையில் கலைஞர் நூற்றாண்டு ஆராய்ச்சி நிலையம் திறக்கப்படவுள்ளது. அதற்காக ரூ.100 கோடி ஒதுக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் சுப்பிரமணியன் தெரிவித்தார்.
தமிழ்நாடு மருத்துவக் கல்வி, ஆராய்ச்சி இயக்ககத்தின் தரம் உயர்த்தப்பட்டுள்ளது. சென்னை கீழ்ப்பாக்கத்தில் வியாழக்கிழமை நடந்த நிகழ்ச்சியில், அதன் புதிய இலச்சினையை சுகாதாரத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் வெளியிட்டார்.
அத்துடன், பன்னாட்டு மருத்துவ ஆய்விதழ், நுண்ணுயிர் எதிர்ப்பு சிகிச்சை வழிகாட்டு நெறிமுறைக் கையேட்டின் முதல் பிரதி, மருத்துவ மேற்படிப்பு மாணவர்களுக்கான மாவட்ட உள்ளுறைப் பயிற்சித் திட்ட மருத்துவமனைகள் பட்டியல் ஆகியவற்றையும் அமைச்சர் மா.சுப்பிரமணியன் வெளியிட்டார். அப்போது, செய்தியாளர்களைச் சந்தித்து அவர் பேசினார்.
டாக்டர் எம்ஜிஆர் மருத்துவ பல்கலைக்கழகத்தில் ரூ.100 கோடியில் கலைஞர் நூற்றாண்டு மருத்துவ ஆராய்ச்சி கட்டடம் விரைவில் கட்டப்பட உள்ளது. இதற்காக இடம் தேர்வு செய்யப்பட்டு, வடிவமைப்புப் பணிகள் முடிந்துள்ளன. விரைவில் ஒப்பந்தம் கையெழுத்தாக உள்ளது.
மத்திய அரசு ஒதுக்கீட்டில் 6 இளங்கலை மருத்துவ இடங்கள் கடந்த ஆண்டு நிரப்பப்படாமல் காலியாகவே இருந்தன. கலந்தாய்வு மூலம் காலி இடங்களை நிரப்ப வேண்டும். இல்லாவிட்டால், மாநில அரசின் ஒதுக்கீட்டுக்காவது தரவேண்டும் என்று மத்திய அரசுக்கு கடிதம் அனுப்பியும் எவ்விதப் பதிலும் இல்லை.
இதுதொடர்பாக உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்வது குறித்து ஆராய்ந்து வருகிறோம். விரைவில் நல்ல தீர்வு கிடைக்கும் என்று அமைச்சர் மா.சுப்பிரமணியன் கூறினார்.