சென்னை: மதவாதம் என்பதைத் தவிர பாஜகவிடம் வேறு கொள்கை எதுவும் இல்லை என்று முதல்வர் மு.க. ஸ்டாலின் குற்றம் சாட்டியுள்ளார். அவர் செய்தித்தாள் ஒன்றுக்கு அளித்த நேர்காணலில் இவ்வாறு தெரிவித்தார்.
இண்டியா கூட்டணியின் உத்தி என்ன?
வடஇந்தியாவில் வலதுசாரிகளின் பெரும்பலமாக இருக்கும் இந்துத்வா அடிப்படையிலான ஒருங்கிணைப்பை உடைக்க வேண்டிய தேவை இருப்பதாகக் கருதுகிறீர்களா?
இதனை உடைத்து வாக்கு களைப் பெற இண்டியா கூட்டணி யின் உத்தி என்ன என்று முதல்வர் ஸ்டாலினிடம் கேள்வி கேட்கப்பட்டது.
அதற்குப் பதிலளித்த அவர், மதவாதத்தைத் தவிர பாஜகவிடம் கொள்கை என்று எதுவுமே இல்லை. வெறும் வெறுப்பு அரசியலை வைத்துத்தான் வாக்குப் பெறவேண்டும் என்ற போக்கில் செயல்பட்டு வருகின்றனர்.
ஆனால், இண்டியா கூட்டணியின் வலிமை என்பது மதநல்லிணக்கம். அரசியல் சட்டத்தைப் பின்பற்றும் வகையிலான கொள்கைகளை நம்பியே கைகோர்த்துள்ளது இண்டியா கூட்டணி.
அதுவே அதன் வலிமை. பன் முகத்தன்மை கொண்ட இந்திய மாநிலங்களின் உரிமைகளை மதித்து நடத்தல், அடிப்படைப் பிரச்சினைகளை ஆராய்ந்து கவனம் செலுத்துதல் போன்றவற்றில் இண்டியா கூட்டணியைச் சேர்ந்த நாங்கள் நம்பிக்கை வைத்துள்ளோம்.
ஆகவே, மதவாத அரசியலைக் கொண்ட பாஜகவுக்கு எதிராக உள்ள அனைத்து ஜனநாயகச் சக்திகளையும் ஒருங்கிணைத்து, தேர்தல் களத்தில் உள்ள வெற்றி வாய்ப்புகளுக்கேற்ப கூட்டணிக் கட்சிகளிடையே விட்டுக் கொடுக்கும் தன்மையை ஏற்படுத்தி, மக்களின் பேராதரவுடன் வெற்றி பெறுவதே இண்டியா கூட்டணியின் தேர்தல் உத்தி.
அதில் வெற்றி பெறமுடியும் என்பதை அண்மைய இடைத் தேர்தல்கள், கர்நாடக மாநிலச் சட்டமன்றத் தேர்தல் போன்றவை காட்டியிருப்பதைப் பார்த்திருப்பீர்கள்.
தலைவர் கருணாநிதியின் வழியில், நாட்டின் இன்றையச் சூழலையும், சமூக வலைத்தளங்கள் உள்ளிட்ட தகவல் தொழில்நுட்ப வளர்ச்சியைக் கருத்தில் கொண்டும் இண்டியா கூட்டணியின் செயல்பாட்டில் தி.மு.க தன் பங்களிப்பை விரிவுபடுத்தியுள்ளது. என் உயரம் எனக்குத் தெரியும் என்று சொன்னவர் எங்கள் தலைவர் கருணாநிதி. மு.க.ஸ்டாலினுக்கும் தன் உயரம் நன்றாகத் தெரியும் என்று கூறியுள்ளார்.
இந்தித் திணிப்பை எப்படி எதிர்கொள்வீர்கள்?
மத்திய அரசின் புதிய சட்ட முன்மொழிவுகளுக்கு இந்தியில் பெயர் வைக்கப்படுகிறது. ஏற்கெனவே உள்ள சட்டங்களும் இந்தியில் பெயர் மாற்றம் செய்யப்படுகின்றன. இந்தி ஆதிக்க எதிர்ப்புக்காக அறியப்பட்ட தி.மு.க.வும் தமிழ்நாடும் இந்த விஷயத்தில் என்ன செய்யப் போகின்றன?
இதுகுறித்து நாடாளுமன்ற மாநிலங்களவை, மக்களவை இரண்டிலுமே தி.மு.க.வின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் கவனத்தை ஈர்த்திருக்கிறார்கள். முழுக்க முழுக்க இந்தியிலான அறிவிப்புகள், அழைப்பிதழ்களைக் கிழித்தெறிந்து எதிர்ப்பைக் காட்டியிருக்கிறார்கள்.
தாய் மொழிகளுக்கு ஆபத்து ஏற்படுத்தும் ஒரே நாடு, மொழி திட்டம்
பா.ஜ.க. அரசின் ஒரே நாடு, ஒரே மொழி என்கிற மறைமுகத் திட்டம், தமிழை மட்டுமின்றி இந்தியாவின் பிற மாநிலங்களில் பேசப்படும் அவரவர் தாய் மொழிகளுக்கும் எந்தளவு ஆபத்தை உண்டாக்கும் என்பதை தி.மு.க. தொடர்ந்து வலியுறுத்தி வருகிறது.
பல மாநிலங்களிலும் இது குறித்த விழிப்புணர்வு நிகழ்வுகள் மேற்கொள்ளப்படுகின்றன. எங்களைப் பொறுத்தவரை நாங்கள் எந்த ஒரு மொழிக்கும் எதிரிகள் அல்ல. எங்கள் மொழி மீது எந்தவொரு மொழியைத் திணித்தாலும் அதை உறுதியாக எதிர்ப்பவர்கள். அந்த நிலை தொடரும். நாடாளுமன்றத் தேர்தல் முடிவுகளுக்குப் பிறகு, அமையவிருக்கிற புதிய ஆட்சி யில் அனைத்து மொழிகளுக்கும் உரிய உரிமையும் முக்கியத்துவமும் சமமாக வழங்கப்படும் என்று முதல்வர் ஸ்டாலின் கூறினார்.