தமிழ் முரசு வாசகர்களுக்கு எங்கள் உளங்கனிந்த தீபாவளி வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

தமிழக அமைச்சர்கள் மீதான சொத்து குவிப்பு வழக்கு: உச்ச நீதிமன்றத்தில் பாஜக கேவியட் மனு!

1 mins read
20fafb0c-a33f-47b0-ac7b-abae9bee7166
அண்ணாமலை. - படம்: ஊடகம்

சென்னை: தமிழக அமைச்சர்கள் 3 பேரின் சொத்து குவிப்பு வழக்கு விசாரணையில் தமிழக பாஜக சார்பாக கேவியட் மனுத்தாக்கல் செய்யப்பட்டுள்ளது

அதிகார பலத்தில் தமிழக அரசின் விசாரணை அமைப்புகளை முடக்கி, ஊழல் குற்றச்சாட்டுகளில் இருந்து எளிதில் தப்பித்துவிடலாம் என்ற திமுகவின் எண்ணம் நிறைவேறாது என தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.

பொன்முடி, கேகேஎஸ்எஸ்ஆர் ராமச்சந்திரன், தங்கம் தென்னரசு ஆகிய மூன்று தமிழக அமைச்சர்கள் மீதான சொத்துக்குவிப்பு வழக்கில் தங்களது கருத்தையும் அனுமதிக்க கோரி தமிழ்நாடு பாஜக திடீரென உச்ச நீதிமன்றத்தில் கேவியட் மனு தாக்கல் செய்துள்ளது.

இதனால் அரசியல் அரங்கில் பரபரப்பு நிலவும் சூழலில், திமுகவின் ஒவ்வொரு ஊழல் அமைச்சருக்கும் எதிராக சட்டப் போராட்டம் நடத்தி, அவர்களுக்கு சட்டரீதியான தண்டனை கிடைப்பதை பாஜக நிச்சயம் உறுதி செய்யும்,” என பாஜக மாநில தலைவர் அண்ணாமலை கூறியதாக ஏசியாநெட் தமிழ் ஊடகச் செய்தி தெரிவிக்கிறது.

இந்த மூன்று அமைச்சர்களும் சொத்துக் குவிப்பு வழக்குகளில் இருந்து விடுவித்ததை எதிர்த்து தமிழக அரசின் ஊழல் தடுப்பு பிரிவினர் மேல்முறையீடு செய்யவில்லை என்றும் திமுக அமைச்சர்களுக்கு எதிரான இந்த சொத்துக் குவிப்பு வழக்குகள் கையாளப்பட்ட விதம் சந்தேகத்துக்கிடமாக இருப்பதால் சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ், இந்த வழக்குகள் தொடர்பான சீராய்வு மனு விசாரணையை தாமாக முன்வந்து எடுத்தார் என்றும் அண்ணாமலை கூறியுள்ளார்.

குறிப்புச் சொற்கள்