சென்னை: தமிழ்நாட்டின் தலைநகர் சென்னையில், இருசக்கர வாகனமோட்டிகள் தலைக்கவசம் அணிந்து செல்வதன் அவசியத்தை வலியுறுத்தும் வகையில் போக்குவரத்துக் காவல்துறையினர் புதிய உத்தியைக் கடைப்பிடிக்கத் தொடங்கியுள்ளனர்.
தலைக்கவசம் அணிந்து சென்ற மோட்டார் சைக்கிள் ஓட்டிகளை நிறுத்தி அவர்களுக்கு லட்டு மற்றும் இனிப்பு வழங்கிப் பாராட்டினர்.
இரு சக்கர வாகனம் ஓட்டுபவர் மட்டுமின்றி அந்த வாகனத்தின் பின்னால் அமர்ந்திருப்பவரும் தலைக்கவசம் அணிந்திருக்க வேண்டும் என்பது தமிழ்நாட்டின் சட்டம். ஆனால், பெரும்பாலும் இரு சக்கர வாகனத்தின் பின்னால் உட்கார்ந்திருப்பவர்கள் தலைக்கவசம் அணிந்து செல்வது மிகக்குறைவு.
மோட்டார் சைக்கிளின் பின்னால் உட்கார்ந்து செல்பவரும் தலைக்கவசம் அணிவது அவசியம் என்பதை வலியுறுத்தும் வகையில் சென்னை மாநகரப் போக்குவரத்துக் காவல்துறையினர், போக்குவரத்து விதிமுறைகளைச் சரியாகக் கடைப்பிடிப்போருக்கு இனிப்பு வழங்கிப் பாராட்டும் புதிய உத்தியைக் கடைப்பிடித்துள்ளனர்.
சென்னை வேப்பேரியில் உள்ள காவல் ஆணையர் அலுவலகம் அருகே போக்குவரத்துக் காவல் ஆய்வாளர் பாண்டிவேலு தலைமையில் போக்குவரத்துக் காவல்துறையினர் நேற்று தலைக்கவசம் குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்திருந்தனர். அப்போது கார்ட்டூன் பொம்மைபோல வேடமணிந்த கலைஞர்கள் மூலம் இருசக்கர வாகனமோட்டிகளுக்கு இனிப்பு வழங்கி போக்குவரத்து விதிமுறைகள் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்தினர்.