திருநெல்வேலி: தாமிரபரணி ஆறு அருகே தலித் பிரிவைச் சேர்ந்த இளைஞர்கள் மீது சிறுநீர் கழித்து துன்புறுத்தல் செய்த சந்தேகத்தில் ஆறு பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
திருநெல்வேலியின் மணி மூர்த்தீஸ்வரம் பகுதியை சேர்ந்த இரண்டு இளைஞர்கள் கடந்த 30ம் தேதி தாமிரபரணி ஆற்றில் குளிக்கச் சென்றுள்ளனர்.
குளித்துவிட்டு வீடு திரும்பியபோது, 6 பேர் கொண்ட கும்பல் அவர்களைத் தடுத்தது.
இளைஞர்கள் தலித் சமூகத்தினர் என தெரிந்ததும் அவர்களை நிர்வாணப்படுத்தி சிறுநீர் கழித்தும் தாக்கியும் உள்ளது அந்த கும்பல்.
மேலும் இளைஞர்களிடமிருந்து கைப்பேசிகளையும் அந்த கும்பல் திருடியுள்ளது.
காயமடைந்த இருவரும் திருநெல்வேலியில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இந்நிலையில் இளைஞர்களின் உறவினர்கள் இச்சம்பவம் தொடர்பாக தஞ்சநல்லூர் காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளனர்.
அதையடுத்து சந்தேகத்தின் பேரில் 6 நபர்களை கைது செய்தது காவல்துறை.
கைது செய்யப்பட்டவர்கள் மீது வன்கொடுமை, வழிப்பறி உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.