சென்னை: தமிழகத்தில் புதிய மருத்துவக் கல்லூரிகள், கூடுதல் இடங்களுக்கான தடையை நீக்க வேண்டும் என்று வலியுறுத்தி பிரதமர் நரேந்திர மோடிக்கு பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் அவசரக் கடிதம் எழுதி உள்ளார்.
இந்தியாவின் அனைத்து மாவட்டங்களிலும் குறைந்தது ஒரு மருத்துவக் கல்லூரியாவது அமைக்கப்பட வேண்டும் என்ற மத்திய அரசின் நிலைப்பாட்டிற்கு முற்றிலும் எதிராக தேசிய மருத்துவ ஆணையத்தின் விதிமுறைகள் அமைந்துள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
இந்தியாவில் எந்த மாநிலமாக இருந்தாலும் 10 லட்சம் மக்கள் தொகைக்கு அதிகபட்சமாக 100 மருத்துவ மாணவர் சேர்க்கை இடங்கள் மட்டுமே அனுமதிக்கப்படும் என்றும் தேசிய மருத்துவ ஆணையம் கூறியுள்ளது. அதற்கும் கூடுதலான மருத்துவ மாணவர் சேர்க்கை இடங்கள் உள்ள மாநிலங்களில் புதிய மருத்துவக் கல்லூரிகளோ, மருத்துவ மாணவர் சேர்க்கை இடங்களோ அனுமதிக்கப்படாது என்றும் அந்த ஆணையம் அறிவித்திருக்கிறது.
இதுபோன்ற விதிமுறைகள் தமிழ்நாடு, கேரளம் போன்ற வளர்ச்சியடைந்த தென் மாநிலங்களையே பாதிக்கும் என்றும் இன்னும் பல பத்தாண்டுகளுக்கு தமிழ்நாட்டில் புதிய மருத்துவக் கல்லூரிகளைத் தொடங்க முடியாது என்றும் அன்புமணி சுட்டிக்காட்டி உள்ளார். தேசிய மருத்துவ ஆணையத்தின் இந்த நடவடிக்கை மிகவும் பிற்போக்கானது என்றும் சற்றும் ஏற்றுக்கொள்ள முடியாத ஒன்று என்றும் அவர் கூறியுள்ளார்.

