தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

சொத்துக்குவிப்பு வழக்கு: அமைச்சர் பொன்முடி மனுவை தள்ளுபடி செய்த உச்ச நீதிமன்றம்

2 mins read
b85aa4c1-9f33-4e39-8b23-aeb2c115eec0
பொன்முடி. - படம்: ஊடகம்

சென்னை: சொத்துக் குவிப்பு வழக்கு தொடர்பாக அமைச்சர் பொன்முடி தாக்கல் செய்த மனுவை உச்ச நீதிமன்றம் தள்ளுபடி செய்து உள்ளது.

இது திமுக வட்டாரங்களில் அதிர்ச்சி அலைகளை ஏற்படுத்தி உள்ளது.

தன் மீதான சொத்துக் குவிப்பு வழக்கை சென்னை உயர் நீதிமன்றம் விசாரிக்கத் தடைவிதிக்க வேண்டும் என பொன்முடி தமது மனுவில் கோரியிருந்தார்.

கடந்த 2002ஆம் ஆண்டு அதிமுக ஆட்சியில் பொன்முடி மீது சொத்துக் குவிப்பு வழக்குப் பதிவானது. பொன்முடி மட்டுமல்லாமல் அவரது மனைவி உள்ளிட்ட மேலும் ஐந்து பேர் இந்த வழக்கில் சேர்க்கப்பட்டனர்.

இவ்வழக்கை விசாரித்த வேலூர் நீதிமன்றம், போதிய ஆதாரங்கள் இல்லை என்று கூறி குற்றம்சாட்டப்பட்ட அனைவரையும் விடுதலை செய்தது.

கடந்த ஜூன் 28ஆம் தேதி அமைச்சர் பொன்முடி தரப்பினர் விடுதலை செய்யப்பட்ட நிலையில், சொத்துக் குவிப்பு வழக்கை தாமாக முன்வந்து விசாரிக்கப் போவதாக அறிவித்தார் சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ்.

இவ்வழக்கை மறு ஆய்வு செய்ய வேண்டி இருப்பதாக அவர் குறிப்பிட்டார். இதை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தை அணுகினார் அமைச்சர் பொன்முடி.

அவர் தாக்கல் செய்த மனுவை உச்சநீதிமன்றத் தலைமை நீதிபதி சந்திரசூட் விசாரித்தார். இருதரப்பு வாதங்களையும் செவிமெடுத்த அவர், அமைச்சர் பொன்முடியின் மனுவைத் தள்ளுபடி செய்தார்.

சொத்துக்குவிப்பு வழக்கை சென்னை உயர் நீதிமன்றம் விசாரிக்க எந்தவிதத் தடையும் இல்லை என்றும் அவர் குறிப்பிட்டார்.

மேலும் ஆனந்த் வெங்கடேஷ் போன்ற நீதிபதிகள் நீதிதுறையில் இருப்பதற்காக கடவுளுக்கு நன்றி என்றும் தலைமை நீதிபதி சந்திரசூட் கருத்து தெரிவித்தார்.

குறிப்புச் சொற்கள்