தேனி: தமிழ் நாட்டின் பல பகுதிகளில் கடந்த ஒரு வாரத்திற்கும் மேலாக கனமழை பெய்து வருகிறது.
அதன் காரணமாக அணைகளின் நீர்மட்டம் கணிசமாக உயர்ந்துள்ளது. அவ்வகையில் தேனி மாவட்டத்தில் உள்ள ஆண்டிப்பட்டி அருகே 71 அடி உயரமுள்ள வைகை அணையின் நீர்மட்டம் வியாழக்கிழமை காலை நிலவரப்படி 69.5 அடியை எட்டியுள்ளது.
அணையின் நீர் மட்டம் 67 அடியை எட்டியதும் முதல் எச்சரிக்கையும், 68 அடியை எட்டியதும் இரண்டாம் எச்சரிக்கையும் விடப்பட்ட நிலையில், புதன்கிழமை 69 அடியை நெருங்கியதும் 3ஆம் கட்ட வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டது.
இந்நிலையில் வியாழக்கிழமை காலை அணையின் உயரத்தை நீர்மட்டம் தொடும் அளவுக்கு அதிகரித்துள்ளது. அதையடுத்து அப்பகுதியில் வாழும் மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
மதுரை மாவட்டம் மேலூர், பேரணை, கள்ளந்திரி பகுதி பாசனத்துக்காக வெள்ளிக்கிழமை (10ஆம் தேதி) முதல் தண்ணீர் திறக்க அரசு உத்தரவிட்டது. இதன் காரணமாக உபரி நீரை வெளியேற்றாமல் நீர் மட்டத்தை அதிகரிக்க அதிகாரிகள் திட்டமிட்டுள்ளனர்.
இந்நிலையில், தேனி, திண்டுக்கல், மதுரை, ராமநாதபுரம், சிவகங்கை ஆகிய ஐந்து மாவட்ட மக்களுக்கு 3ஆம் கட்ட வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. அதையடுத்து கரையோரப் பகுதி மக்களின் பாதுகாப்பை அதிகாரிகள் தொடர்ந்து கண்காணித்து வருகின்றனர்.