சென்னை: தமிழ்நாட்டில் வாகனங்களுக்கான புதிய வரி வியாழக்கிழமை முதல் நடப்புக்கு வந்துள்ளது.
சரக்கு வாகனங்கள், வாடகைக்கு இயக்கப்படும் வாகனங்கள். பயணிகள் போக்குவரத்து வாகனங்கள், சுற்றுலா வாகனங்கள், ஒப்பந்த வாகனங்கள், ஆம்னி பஸ்கள், அனைத்து வகை புதிய, பழைய இருசக்கர வாகனங்கள், ஆட்டோ உள்ளிட்ட 3 சக்கர வாகனங்கள், கல்வி நிறுவனங்களுக்கு சொந்தமான பேருந்துகள் மற்றும் வாகனங்கள், கட்டுமானத்துக்கு பயன்படும் வாகனங்கள், கார்கள், டாக்சிகள், ‘கேப்’கள் என அனைத்து வகை மோட்டார் வாகனங்களுக்கும் புதிய வரி நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
படுக்கை வசதி கொண்ட ஆம்னி பஸ்களுக்கு ரூ.3,000 முதல் ரூ.4,000 வரை வரி உயர்த்தப்பட்டுள்ளது. ரூ.1 லட்சத்துக்குள் விலை கொண்ட புதிய மோட்டார் சைக்கிள்களுக்கு அதன் விலையில் 10 விழுக்காடு வாழ்நாள் வரி நிர்ணயிக்கப்பட்டு உள்ளது.
ரூ.1 லட்சத்துக்கு மேல் ரூ.5 லட்சம் வரை விலை கொண்ட மோட்டார் சைக்கிள்களுக்கு அதன் விலையில் 12 விழுக்காடும், ரூ.5 லட்சம் முதல் ரூ.10 லட்சம் விலை கொண்ட மோட்டார்சைக்கிள்களுக்கு 13 விழுக்காடும், ரூ.10 லட்சம் முதல் ரூ.20 லட்சம் விலை கொண்ட மோட்டார் சைக்கிள்களுக்கு 18 விழுக்காடும், ரூ.20 லட்சத்துக்கும் மேல் விலை கொண்ட மோட்டார்சைக்கிள்களுக்கு 20 விழுக்காடும் வாழ்நாள் வரி நிர்ணயிக்கப்பட்டு உள்ளது.
வாகனங்களுக்கான வரி உயர்வை தமிழக அரசு அமல்படுத்தியதைத் தொடர்ந்து, மாநிலம் தழுவிய அளவில் லாரி உரிமையாளர்கள் வியாழக்கிழமை ஒரு நாள் அடையாள வேலைநிறுத்தத்தை மேற்கொண்டுள்ளனர். 6.5 லட்சம் கனரக வாகனங்களும், 25 லட்சம் இலகு ரக வாகனங்களும் போராட்டத்தில் பங்கேற்றுள்ளன.