சென்னை: தீபாவளிப் பண்டிகையையொட்டி கடந்த இரு நாள்களாக பொதுமக்கள் பட்டாசுகள் வெடித்ததால் சென்னையில் காற்று மாசு அதிகரித்துள்ளது.
இதனால் பலர் சுவாசப் பிரச்சினைகளால் பாதிக்கப்படும் அபாயம் நிலவி வருகிறது.
சென்னையின் பல்வேறு பகுதிகளிலும் தற்போது பனிப்பொழிவும் அதிகரித்துள்ளது. பட்டாசுகள் வெடிப்பதால் ஏற்படும் புகைமூட்டமும் அதிகரித்து வருவதால், பொதுமக்கள் பல்வேறு சிரமங்களை எதிர்கொண்டுள்ளனர்.
மேலும், சுவாசப் பிரச்சினைகள் உள்ளிட்ட காரணங்களால் பலருக்கு உடல்நலமும் பாதிக்கப்படுகிறது.
சென்னை மாநகரின் பல்வேறு பகுதிகளில் காற்றின் தரக்குறியீடு நூறு முதல் 200 புள்ளிகளாகப் பதிவாகி உள்ளது.
பெருங்குடியில் 169, ராயபுரத்தில் 121, மணலியில் 109, கொடுங்கையூரில் 112, அரும்பாக்கத்தில் 134 புள்ளியாகவும் காற்றின் தரக் குறியீடு பதிவாகி உள்ளது.
கும்மிடிப்பூண்டி 230, வேலூரில் 123, கடலூரில் 112 என்ற அளவில் காற்றின் தரக்குறியீடு பதிவாகி உள்ளதாக சுகாதாரத்துறை வட்டாரங்கள் தெரிவித்தன.
இதனிடையே, தீபாவளி தினத்தன்று அதிக அளவில் பட்டாசுகள் வெடிக்கப்படும் என்பதால் காற்றின் தரம் மேலும் மோசமடையக்கூடும் என சுகாதார, மருத்துவ நிபுணர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
காற்றுத் தரக் குறியீடு 0 முதல்– 50 புள்ளிகள் வரை இருந்தால், சிக்கல் இல்லை. 400 முதல்– 500 புள்ளிகளாக அதிகரிக்கும் பட்சத்தில் காற்று மிகவும் மாசடைந்து விட்டதாகக் கருதப்படும்.
கடந்த சில நாள்களாக நாட்டின் தலைநகர் டெல்லியில் காற்றின் தரம் வெகுவாகப் பாதிக்கப்பட்டு அபாயகர நிலையை எட்டியுள்ளது. டெல்லி மக்கள் பல்வேறு பாதிப்புகளை எதிர்கொண்டு அவதிப்பட்டு வருகின்றனர்.